A boy who went to Velliangiri Hill lost his life

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக சுமார் 6000 அடி உயரம் இருக்கக்கூடிய வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. ‘தென்கைலாயம்’ என அழைக்கப்படும் இந்த வெள்ளிங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதிவரை தொடர்ச்சியாகப் பக்தர்கள் மலையேறி அங்குள்ள சிவபெருமானை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதே சமயம் வெள்ளியங்கிரி மலைக்கு வருபவர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. முன்னதாக வெள்ளிங்கிரி மலையில் மலையேறச் சென்றவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மூச்சுத்திணறல்; உடல் எடை பிரச்சனை; இதய பிரச்சனை இருப்பவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறை சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்கு வழக்கத்தை விட அதிகமான கூட்டம் நிரம்பி வழிந்தது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்வா (வயது 15) என்ற சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நேற்று (12.05.2025) மலை ஏறினார். இதனையடுத்து இன்று (13.05.2025) அதிகாலை 5 மணியளவில் அவர் மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கும் போது மூன்றாவது மலையில் அவர் இருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்து டோலி மூலம் கீழே கொண்டு வந்து பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.