
சிற்றுண்டியை பகிர்வது தொடர்பான பிரச்சனையில், 14 வயது சிறுவனை 12 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் 14 வயது சிறுவன் சேட்டன் ரக்கசாகி மற்றும் 12 வயது சாய். சேட்டன் 8ஆம் வகுப்பும், சாய் 6ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று மாலை 7 மணியளவில் தங்களது வீட்டருகில் இருந்தனர். அப்போது, ரூ.5 சிற்றுண்டி பொட்டலத்தை பகிர்வது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், சேட்டனை சாய் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சேட்டனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர். ஆனால், சேட்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பள்ளி சீனியரை கொலை செய்த குற்றத்தற்காக சாயை உடனடியாக போலீஸ் காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல் ஆணையர் சசி குமார் கூறுகையில், ‘ஒரு 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு, அடுத்தவரை கத்தியால் குத்தும் மனநிலை கொண்டிருப்பது என்பது துர்திஷ்டவசமானது. தொலைக்காட்சியிலோ அல்லது மொபைல் போனிலோ அவர்கள் பார்த்த வன்முறை காரணமாகவும், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட விளைவு காரணமாகவும் இது நடந்திருக்கலாம். இந்த சம்பத்தில் இருந்து அனைவரும் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.