suicide

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., இறுதி ஆண்டு படித்து வந்தார். +2 தேர்வு முடிந்தவுடன் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சிக்கு சென்றபோது சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஒரு மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே இவர்களின் நட்பு காதலாக மாறியது.

இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு சேர்ந்தனர். படிப்பதாக கூறி கடந்த 4 வருடங்களாக மதுரையில் பல இடங்களில் இவர்கள் இருவரும் சுற்றியுள்ளனர். மேலும் வாட்ஸ் அப் மற்றும் முகநூலிலும் இவர்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதேபோல் டப்மாசிலும், டிக்டாக் மியூசிக்கல் ஆப்பிலும் தங்களது புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர்.

Advertisment

இவர்கள் காதலிப்பதும், மதுரையில் பல இடங்களில் சுற்றியிருப்பதும் ராம்குமார் வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. ராம்குமார் தாயார் விருப்பப்படி சிந்துஜாவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

சிந்துஜா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரை பிடித்துவிட்டதால் ராம்குமார் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Ram

Advertisment

இதனைத் தொடர்ந்து ஆடி மாதம் முதல் நாள் சிந்துஜாவின் வீட்டிற்கு வருவதாக ராம்குமார் வீட்டில் தெரிவித்திருந்தனர். இதனை சிந்துஜா தனது வீட்டில் தெரிவித்திருந்தார். அவர்களும் ராம்குமார் குடும்பத்தினரை வரவேற்க தயாராக இருந்தனர். அதன்படி சிந்துஜா வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்க ராம்குமார் குடும்பத்தினர் சென்றனர்.

திருவாதவூரில் சிந்துஜாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை பார்த்தும் ராம்குமார் குடும்பத்தினர் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வந்த உடனேயே ராம்குமார் குடும்பத்தினர் அவசர அவசரமாக திரும்பினர். அதன் பின்னர் சிந்துஜாவிடம் ராம்குமாரை பேசவிடாமல் அவரது பெற்றோர் தடுத்ததாக கூறப்படுகிறது.

ராம்குமார் பேசுவதை குறைத்துக்கொண்டவுடன், சிந்துஜா அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது அவரை தூக்கி எறியும் விதத்தில் பேசியிருக்கிறார் ராம்குமார்.

இதனைத் தொடர்ந்து தனது கையில் பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி படம் எடுத்து அதனை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

ராம்குமாரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கடந்த 31ஆம் தேதி பேரீச்சம் பழத்தில் எலிமருந்தை கலந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தனது தற்கொலை முடிவுக்கு தனது காதலன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்று தெரிவித்துள்ளார்.

சிந்துஜா உயிரிழந்ததும் தகவலை சொல்லியும், ராம்குமார் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்றும், சிந்துஜா உயிரிழந்ததற்கு ராம்குமார் குடும்பம்தான் காரணம் என்றும், சிந்துஜா குடும்பத்தினர் கூறினர்.