சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக பாக்கெட்களில் தான் விற்பனை செய்ய வேண்டும்!
கர்நாடகாவில் சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக பாக்கெட்களில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தனித்தனியாக விற்பனை செய்ய கூடாது என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டத்தின் 7 மற்றும் 8 வது பிரிவுகளின்படி, புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த எச்சரிக்கை படம், ஒரு பாக்கெட்டில் 80 சதவீதம் அளவு இருக்க வேண்டும்.
ஆனால், நுகர்வோர் முழு பாக்கெட்டை வாங்காமல், சிகரெட் மற்றும் பீடியை தனித்தனியாக வாங்குகின்றனர். எனவே, பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கை படத்தை அவர்கள் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
எனவே, இனிமேல், சிகரெட் மற்றும் பீடியை முழு பாக்கெட்டாக தான் விற்பனை செய்ய வேண்டும் என கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.