Skip to main content

பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவி - சகோதரிக்கு உருக்கமான கடிதம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Student's heartwarming letter to her sister in andhrapradesh

ஆந்திரப்பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அனகாபல்லி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர், மாணவியைத் தேடி வந்தனர். மேலும், மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், மாணவியிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதனால், இந்த சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், நள்ளிரவு 12:50 மணியளவில், அந்த மாணவி, தனது சகோதரிக்கு வாட்ஸ் அப் மூலம் உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். 

மாணவி அனுப்பிய அந்த குறுஞ்செய்தியில், ‘பதற்றப்பட வேண்டாம், நான் சொல்வதை கேளுங்கள்.  நான் ஏன் செல்கிறேன் என்று உங்களிடம் சொல்ல முடியாது. ஒரு வேளை நான் சொன்னால், உங்களால் புரிந்துகொள்ள முடியாது. தயவுசெய்து என்னை மறந்துவிடுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள். அம்மா.. அப்பா, நீங்கள் என்னை பெற்றடுத்து வளர்த்தற்கு நன்றி. எனது அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. 

எனது சகோதரியே, உன் எதிர்காலத்தில் கவனம் செலுத்து. உனக்கு பிடித்ததையெல்லாம் படி. என்னை போல் திசை திரும்பி விடாதே. பிறரால் பாதிக்கப்படாதே. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். நல்ல வாழ்க்கையை வாழுங்கள். கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். கல்லூரி ஆசிரியர்களிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். ஆனால், அது உதவாது. என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் எனது புகைப்படங்களை எடுத்து என்னை மிரட்டுகிறார்கள். மற்ற பெண்களும் அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாங்கள் யாரிடமும் சொல்ல முடியாது. எங்களால் கல்லூரிக்கு செல்வதையும் தவிர்க்க முடியவில்லை. இடையில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். நான் காவல்துறையில் புகார் அளித்தாலோ அல்லது அதிகாரிகளை அணுகினாலோ எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். நான் இந்த முடிவை எடுப்பதற்கு காரணம், நான் இப்போது போனால், சில வருடங்கள் நீங்கள் என்னை நினைத்து கவலைப்படுவீர்கள். பின்னர் என்னை மறந்துவிடுவீர்கள். ஆனால், நான் அருகில் இருந்தால், நீங்கள் எப்போதும் என்னை பார்த்து வருத்தப்படுவீர்கள். மன்னித்துவிடுங்கள். நான் உங்களை எல்லாம் பதற்றத்தில் உள்ளாக்கிவிட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்த, மாணவியின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாணவியின் படிக்கும் கல்லூரி வளாகத்தில் மாணவியின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், மாணவி தனது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக, ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.