Skip to main content

காலத்தின் குரலாக ஒலிக்கும் அண்ணாவின் தன்னாட்சி!-தணிகைச் செல்வன்

Published on 15/10/2017 | Edited on 15/10/2017


மாநில சுயாட்சியின் குரல் வலுவடைந்துவரும் நிலையில்... விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து ம.தி.மு.க.வும் மாநாடு நடத்தவுள்ளது. இந்நிலையில், அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கை இன்றளவும் வழிகாட்டுவது குறித்து பதிவு செய்கிறார் கவிஞர் தணிகைச்செல்வன் பெரியாருடைய திராவிட நாடும், அண்ணாவின் திராவிட நாடும் வடிவத்தில் (புவிப்பரப்பில்) மட்டுமே ஒன்றாயிருந்தன. உள்ளடக்கத்தில் இரண்டும் வெவ்வேறாய் இருந்தன. பெரியாரின் திராவிட நாடு என்பது என்ன? 

அன்றிருந்த சென்னையில், திராவிட மொழிகளின் உறுப்பினர்கள் ஒரே சட்டமன்றத்தையும், ஒரே ஆட்சி மையத்தையும் கொண்டிருந்தனர். நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோதும் இந்தத் திராவிட மொழிகளின் சகவாழ்வு நீடித்தது. எனவே சென்னை மாகாணத்தையே திராவிட நாடாகத் தக்க வைத்துக்கொள்வதை ஏற்க மற்ற மொழிக்காரர்களுக்கு மறுப்பிராது என்று பெரியார் கருதக் காரணங்களிருந்தன. எனவே, கூட்டரசன்று; கூட்டுக் குடும்பமே அவரது திராவிடத்தின் ஆட்சி முறை.

அண்ணாவின் "திராவிட நாடு'’என்பதன் உள்ளடக்கம் வேறு. அது பெரியாரின் திராவிட நாட்டிலிருந்து மாறுபட்டிருந்தது. சென்னை மாகாணமே திராவிட நாடு என்று பெரியார் சொன்னதையே அண்ணாவும் சொன்னார். என்றாலும் அண்ணாவின் திராவிட அரசு பெரியாருடைய ஒற்றை அரசு அன்று; அண்ணாவின் அரசு கூட்டரசு; திராவிடக் கூட்டரசு. 

தேசம் என்பதற்கும், நாடு என்பதற்கும் உள்ள வேறுபாடு தேசிய இலக்கணத்தில் முக்கியமானது.

ஒரு மொழியை மட்டும் பேசும் மக்களைக் கொண்டது ஒரு தேசம். பல தேசங்களைத் தன்னுள் கொண்டது ஒரு நாடு. 

இந்தியா ஒரு தேசமன்று. இருபது தேசங்களைக் கொண்ட ஒரு நாடு. தமிழ்நாடு என்று நாம் கொண்டாடுவது உண்மையில் ஒரு நாடன்று. அது ஒரு தேசம். தமிழ்த்தேசம் என்பதே சரி. ஒரு தேசத்தை நாடு என்று அழைப்பது தவறாகாது. தமிழ்த் தேசத்தைத் "தமிழ் நாடு' என்றும் அழைக்கலாம். ஆனால், இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடுவது தவறு. இந்தியாவை ஒரு தேசமாகப் பார்ப்பதுதான் அனைத்திந்திய அரசியல்வாதிகளின் பார்வை. 



அண்ணா இதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டார். திராவிடத்தை அவர் தேசம் என்று கூறுவதில்லை. நான்கு தேசங்களைக் கொண்ட நாடு என்ற பொருளில் திராவிட நாடு என்றே பேசினார்; எழுதினார். தமிழ்நாட்டையும் தமிழர்களையும் குறிப்பிடும்போது மட்டுமே அவர் தேசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அவர் ஆங்கிலத்தில் எழுதியபோது இந்த பாகுபாட்டைச் சிறப்பாகக் கையாண்டார். 

திராவிட நாட்டைத் தாய்நாடு (Home Land) எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டைத் தமிழ்த் தேசம் (Tamil Nation)  என்றார். 04-08-1957 ஹோம்லேண்டில் அவர் எழுதியதைக் கீழே படியுங்கள். 

‘"ஒரு தேசம் (Nation) என்பது மொழியால் பிணைக்கப்பட்டது என்பதற்கு வழக்காட வேண்டியதில்லை. டெல்லியின் தேர்க்கால்களில் நாங்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தாலும், தனித்தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் கொண்ட தமிழர்களாகிய நாங்கள் ஒரு தேசம் என்ற மாபெரும் உண்மையைப் பண்டித நேரு ஏற்குமாறு செய்ய உறுதி பூண்டுள்ளோம்.'

தேசம், தேசிய இனம் ஆகிய இரு சொற்களுக்கும் (Nation)  என்ற ஒரே சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்துவதுண்டு, அதைத்தான் அண்ணா செய்திருக்கிறார். 

தேசம் என்றால் அது தமிழ்த் தேசம்தான்; திராவிடத் தேசம் அன்று. தேசிய இனம் என்றால் அது தமிழ்த் தேசிய இனம்தான்; திராவிடத் தேசிய இனமன்று என்பதில் அண்ணா மிகத்தெளிவாய் இருந்தார். லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதை ஒரு பௌதீக ஆற்றலாக மாற்றித் தமிழ்த் தேசிய உணர்வைத் திராவிடப் பொட்டலத்தில் வைத்து வழங்கியவர் -அண்ணா. 

திராவிடர் கழகம் 1944-ல் சேலம் மாநாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. 1945-ல் கும்பகோணத்தில் ஆற்றிய உரையில் ‘திராவிட நாடு’ என்பது என்ன என்பதற்கான விளக்கத்தை மிகச்சரியாகத் தெளிவுபடுத்தியிருந்தார் அண்ணா. அந்த உரை 1945-ல் ஒரு சிற்றேடாக ‘"திராவிடர் நிலை'’என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 1949-ல் சென்னையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் அந்த ஏடு தடை செய்யப்பட்டது. பிறகு 1979-ல் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனபோது அண்ணா நூலின் மீதிருந்த தடையை நீக்கினார். இந்தத் தடையும், தடை நீக்கமும் திராவிட இயக்கத்தினர் பலர் அறியாதவை. 

காங்கிரஸ் அரசு தடை செய்யும் அளவுக்கு அண்ணாவின் உரையில் ஒளிந்திருந்த அந்த பயங்கர ‘வெடிகுண்டு’ என்ன? என்ற புதிரை அறிய நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். அண்ணாவின் நூலில் உள்ள திராவிட நாடு பற்றிய கருத்தைக் கீழே தருகிறோம்: 

""திராவிட நாடு என்பது நான்கு தனித்தனித் தேசங்களைக் கொண்ட ஒரு நாடாக இருக்கும். தமிழ்நாடு பிரிந்து தனித்தேசமாகவும் தனிக்குடியரசாகவும் இருக்கும். ஆந்திரம் பிரிந்து தனித் தெலுங்குத் தேசமாகவும், தனிக்குடியரசாகவும் அரசமைக்கும். அதேபோல் கேரளத்தில் மலையாளக் குடியரசும், கன்னடத்தில் கன்னடக் குடியரசும் அமையும். 

தனித்தனியாக மொழியின் அடிப்படையில் பிரிந்த நான்கு தேசிய இனங்களும் தாமாகவே விரும்பி ஒரு கூட்டுக் குடியரசை அமைக்கும். அந்தக் கூட்டரசுக்குப் பெயர்தான் திராவிட நாடு. மேற்படி நான்கு தேசிய இனங்களுக்கும் பொதுவாக உள்ள அடித்தளம் திராவிடக் கலாச்சாரம். ஆகவே, கலாச்சார அடிப்படையில் மட்டுமே அது திராவிட நாடு எனப்படும்.

அண்ணாவின் கருத்துப்படி, "திராவிடம் ஒரே ஒரு மொழியன்று; திராவிடம் ஒரு இனமன்று; திராவிடம் ஒரு தேசமன்று; பொதுவான கலாச்சாரத்தால் மட்டுமே நான்கு இனங்களின் மக்களையும் ‘திராவிடர்’ என்ற பெயரால் அழைக்கிறோம்' என்றார் அண்ணா. 

ஒவ்வொரு தேசிய இனமும் தனி நாடாகித் தனிக் குடியரசாவதும், பின் அத்தகைய குடியரசுகள் தம் சொந்த விருப்பத்தின்பேரில் ஒரு கூட்டரசு அமைப்பதும் சோவியத் நாட்டின் அரசமைப்பில் இருந்த அடிப்படைப் பண்பாகும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பிரிந்து போகும் உரிமையுடன் அமைந்த சுய நிர்ணய உரிமை சோவியத் ஒன்றியம் அமைவதற்கான அடித்தளமாக இருந்தது. தொலைநோக்குச் சிந்தனையோடு லெனினும் ஸ்டாலினும் கட்டமைத்த சோவியத் அரசியல் கோட்பாட்டையே அண்ணாவும் திராவிட நாடு கூட்டரசுக்குப் பயன்படுத்தினார். ரஷியா, லெனின், ஸ்டாலின் ஆகிய பெயர்களை அண்ணா குறிப்பிடவில்லை என்றாலும், அண்ணாவின் உரைக்குள்ளே ரஷியாவின் ‘புரட்சி வெடி’ புதைந்திருப்பதாகக் காங்கிரஸ் அரசு கருதியதில் வியப்பேதுமில்லை. எனவே தான் அண்ணாவின் நூல் தடை செய்யப்பட்டது. 

அண்ணாவின் தொலைநோக்குக் கோட்பாடான நான்கு தேசிய குடியரசுகளின் கூட்டரசு என்ற திராவிட நாடு, 1962-ல் வந்த இந்திய அரசின் பிரிவினைத் தடைச்சட்டம் என்ற பீரங்கி வண்டியின் கீழ் நசுக்கப்படும் பேராபத்து முளைத்தபோது, இந்தியாவின் கடைசி ஜனநாயகவாதி என்று வர்ணிக்கப்பட்ட நேருவின் மீது நம்பிக்கை இழந்தார் அண்ணா. 

இந்தியச் சட்டம், திராவிடநாடு என்ற கருத்தியலை மட்டும் அன்றி, தி.மு.க என்ற அமைப்பையே நொறுக்கித்தள்ளிவிடும் என்று அஞ்சினார். ஒரு அரசியல் இயக்கத்தின் ஆணி வேர் என்பது அந்தக் கட்சியின் அமைப்புதான். ஒரு சர்வாதிகாரச் சட்டத்தால் தி.மு.கழகமே சிதறுண்டு போய்விடும் என்ற கொடிய நிலையை ஆயுதப்போரால் எதிர்கொள்ளும் வலுவில் கட்சியின் அடித்தளம் அமையவில்லை, அறிவுப்போரிலேயே நாட்டை வென்றுவிடலாம் என்று அண்ணா நம்பினார். 

பிரிவினைத் தடைச்சட்டத்தால் கட்சியின் இலக்கை அடைய முடியாமல் போனாலும் கழகத்தின் அமைப்பை அழியவிடாமல் காப்பதுதான் அன்றைய உடனடிக் குறிக்கோள் எனத் துணிந்து கழகக்கட்டுமானத்தின் மீது நேரு கைவைக்க முடியாதபடி அண்ணா வகுத்த உத்திதான் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவது என்ற முடிவு.

தாலியைப் பறிக்க வந்த திருடன், ‘"தாலியைத் தருகிறாயா? இல்லை உயிரை விடுகிறாயா?'’என்று  கத்திமுனையில் மிரட்டும்போது, தாலியை இழந்தால் மீண்டும் பெறலாம். உயிரை இழந்தால் பெறமுடியாது என்று ஒரு பெண் எடுக்கும் முடிவைப் போன்றதே அண்ணா எடுத்த முடிவு.

பிரிவினை கோராமல் பிரிவினையால் கிட்டும் பயன்களைக் கோருவது என்பதுதான் அண்ணாவின் போர் உத்தி. அதைத்தான் அவர் மாநில சுயாட்சி (தன்னாட்சி) என அடையாளப்படுத்தினார். 

தன்னாட்சிக்கும் தனியாட்சிக்கும் உள்ள வேறுபாடு அரசு அதிகாரம் யாரிடம் இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதில்தான் உள்ளது. மைய அரசின் அதிகாரங்களில் சிலவற்றை மாநில அரசுக்கு வழங்குவது தன்னாட்சி. மையம் இல்லாமல் மாநிலம் இயங்க இயலாது.

சுதந்திரமான ஒரு தேசத்தின் குடியரசு வேறு சில குடியரசுகளுடன் இணைந்து குடியரசுகளின் கூட்டரசை நிறுவும்போது அவற்றுக்கான மைய அரசும் நிறுவப்படும். அந்த மைய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. குடியரசுகள் விரும்பினால் எல்லைப் பாதுகாப்பு, அயல் உறவு போன்ற சில அதிகாரங்களை மைய அரசுக்கு வழங்கும். வழங்கிய அதிகாரங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும். உரிமையும் தேசிய இன அரசுக்கு உண்டு. இதைத்தான் தனி ஆட்சி என்கிறோம். 

தனி அரசு என்ற அண்ணாவின் கோரிக்கையின் மீது தடைச்சட்டம் பாயத் தயாரானபோது, தன்னாட்சி என்ற கொள்கைக்கு மாற அண்ணா தயங்கவில்லை.

ஒருகோடி தம்பியரை டெல்லியின் எறிகணையிலிருந்து பாதுகாத்தால் எதிர்காலத்தில் அவர்களை ஏவுகணைகளாக மாற்ற முடியும் என்ற அண்ணாவின் கணிப்பு துல்லியமானது. 1962-ல் தடைச்சட்டத்தில் இருந்து தப்பித்த ஐந்தே ஆண்டுகளில் 1967-ல் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாகக் கனிந்து நின்றது தி.மு.க.

சுயநிர்ணய ஆட்சி என்பதற்கு மாற்றாக சுயாட்சி என்பதைத் தெரிவு செய்த போர்த் தந்திரம்தான் தமிழ் மாநிலத்தில் அமைந்த அவரது அரசையே டெல்லிக்கு எதிரான ஆயுதமாக ஏந்தும் ஆற்றலை அண்ணாவுக்குத் தந்தது. 

டெல்லி ஆதிக்கத்திற்கு எதிராக ‘எழுச்சி நாள்’ என அறிவித்து, சேலம் இரும்பாலை கோரிப் போராடி மத்திய அரசை ஒரு மாநில அரசால் பணிய வைக்க முடியும் என மெய்ப்பித்தது அண்ணாவின் தன்னாட்சி.

27-06-1967 அன்று முதலமைச்சர் அண்ணா சென்னை சட்டமன்றத்தில் பேசினார்: 

"நான் திராவிட நாடு கோருவதைக் கைவிட்டுள்ளேன். ஆனால், அதற்கான காரணங்களைக் கைவிடவில்லை'’என்பதே அவர் பேச்சின் உள்ளீடு.

"நான் நாடு பிரிவினையைக் கைவிட்டதாலேயே அதற்கான நியாயங்களை வென்றெடுக்காமல் விட்டு விடுவேன் என்று கருத வேண்டாம்'’என்று மத்திய அரசை அண்ணா எச்சரிப்பதற்கான வலுவைக் கொடுத்தது அவர் அமைத்த அரசுதான்.

இந்தப் பின்னணியில்தான் 2017 செப்டம்பர் 21-ல் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றிகரமாக ஒருங்கிணைத்த மாநில சுயாட்சி மாநாட்டின் வீச்சு தமிழக அரசியலில் நிகழ்த்தியுள்ள தாக்கத்தைக் கணிக்கவேண்டும். அந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த கருத்துகள் நாடாளுமன்றத்தில் அண்ணா வைத்த வாதங்களின் சாரங்களே. 

மாநில சுயாட்சிக் கருத்தியலை இந்திய அளவில் விரிவுபடுத்த தி.மு.க. முனையவேண்டும் என்று ஸ்டாலினுக்குத் திருமாவளவன் வைத்த கோரிக்கை காலத்தின் குரல்.

சார்ந்த செய்திகள்