Skip to main content

திருவள்ளுவர் சிலைக்கு சொந்தக்காரர் யார்?

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு சொந்தக்காரர் யார்?



நடிகர் திலகம் சிவாஜி சிலைக்கு மாடல் பார்த்து, ஆர்டர் கொடுத்து, இடம் தேர்வு செய்து கடற்கரைச் சாலையில் சிலையைத் திறந்துவைத்தவர் கலைஞர்.

போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து கோட்டைக்கு வரும்வழியில் இருந்த அந்தச்  சிலையின்  பீடத்தில் திறப்பாளர் கலைஞர் கருணாநிதி என்று இருந்தது. காரில் வரும்போது தனது கண்ணில் படும் இந்தப் பெயரைச் சகித்துக் கொள்ளமுடியாத ஜெயலலிதா, அந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வழக்குத் தொடர ஏற்பாடு செய்தார் எனக் கூறப்பட்டது.

அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று சிவாஜி சிலையை அகற்ற உத்தரவு பெற்று, இரவோடு இரவாக அகற்றினார்கள். தனது நண்பர் என்ற வகையில் தமிழ்த் திரையுலகின் தலைமகன் சிவாஜிக்கு சிலையும், மணிமண்டபம் அமைக்க இடமும் ஒதுக்கியவர் கலைஞர்.

ஆனால், சிலையை அகற்றி, அவர் ஒதுக்கிய இடத்தில் கட்டப்பட்ட மணிமண்டபத்தில் வைக்கும்போது, பீடத்தில் ஏற்கெனவே பொறிக்கப்பட்டிருந்த கலைஞரின் பெயரையும் அகற்றிவிட்டார்கள் அதிமுக ஆட்சியாளர்கள்.

இது அநியாயம் என்று குரல் எழுப்பினால், சற்றும் பொரு்த்தமில்லாமல் தமிழக அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். கன்னியாகுமரியில் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியவர் எம்ஜியார் என்றும் அவருடைய பெயரை கலைஞர் ஏன் பொறிக்கவில்லை என்றும் அமைச்சர்களே கேட்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? சற்று பின்னோக்கி போவோம்...



திருவள்ளுவர் சிலையின் வரலாறு இதுதான்?

அமெரிக்காவுக்கு சென்றிருந்த கலைஞர் அங்கு கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலையைப் பார்க்கிறார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவலாமே என்று நினைக்கிறார்.

தமிழகம் திரும்பிய கலைஞர்  1975ல் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா தலைவர் ஏக்நாத் ரானடேவுடன் கலந்து பேசுகிறார்.

அந்த அடிப்படையில், விவேகானந்தர் பாறையின் அருகில் உள்ள பாறையில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கும் திட்டத்தை செயல்வடிவமாக்க முடிவு செய்கிறார். ஆக, கலைஞரின் மூளையில் கருத்தரித்தது இந்த சிலை அமைக்கும் திட்டம்.

கலைஞர் மூளையில் உதித்த அந்தத் திட்டத்திற்கோ, வேறு எந்த திட்டத்திற்கோ, 1979ல் பிரதமர் மொரார்ஜியை அழைத்து வந்து எம்ஜியார் அடிக்கல் நாட்டினார்.

அத்தோடு சரி. இப்போதும், அந்த அடிக்கல் எங்கேயிருக்கிறது என்பதே தெரியாமல் போச்சு...

மீண்டும் கலைஞர் 1989ல் ஆட்சிக்கு வந்தபிறகு 1990ல் தனக்குள் கருவான திருவள்ளுவர் சிலையை உருவாக்க கணபதி ஸ்பதியிடம் பேசுகிறார். திட்டத்துக்கான நிதியையும் அந்த ஆண்டுதான் ஒதுக்குகிறார்.

ராஜிவ் கொலையில் திமுகவை தொடர்புபடுத்தி தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படுகிறது...

1991ல் ஆத்தா ஜெயலலிதா ஆட்சி்க்கு வந்தவுடன் திருவள்ளுவர் திட்டம் குப்பையில் போடப்படுகிறது...

1996ல் கலைஞர் வெற்றி பெற்ற பிறகு 1997ல் சிலை அமைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டு 2000ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கலைஞரால் திறக்கப்படுகிறது.

இதுதான் திருவள்ளுவர் சிலையின் வரலாறு. தமிழக அமைச்சர்கள், குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அந்த அடிக்கல் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்