Skip to main content

செவிலியர் கோரிக்கைகள் நியாயமானவையா?

Published on 29/11/2017 | Edited on 30/11/2017
செவிலியர் கோரிக்கைகள் நியாயமானவையா? 
அரசுமணி விளக்கம்



அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் குறித்து மருத்துவ தேர்வு வாரிய செவிலியர்கள் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் அரசு மணி கூறியதாவது...

டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. மூலம் எப்படி பணிக்கு தேர்ந்தெடுத்து முழு ஊதியம் வழங்குகிறார்களோ, அதேபோல் மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். எங்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசு நடைமுறையில் இருப்பதுதான்.

மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 25 வகையான பணியாளர்களை எடுத்துள்ளனர். அதில் மருத்துவர்கள் உள்பட 24 வகையான பணியாளர்களுக்கு எந்த தேதியில் பணியில் சேர்ந்தார்களோ, அந்த நாளில் இருந்து முழு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் செவிலியர்களை மட்டும் தொகுப்பு ஊதியத்தில் வைத்துள்ளனர். இதனை மருத்துவ தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.



எங்களுக்கு உதவியாளராக 8வது படித்தவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால், அவர்கள் பணியில் சேர்ந்த உடனேயே வாங்கும் முழு ஊதியம் 21 ஆயிரம் ரூபாய். 3 வருட டிப்ளமோ, 4 வருட டிகிரி, அதனைத் தொடர்ந்து 2 வருட எம்எஸ்சி என 6 வருடம் படித்த எங்களுக்கு 7700 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு என்று சில இடங்களில் மட்டுமே கொடுக்கிறார்கள். சில இடங்களில் கொடுப்பதில்லை. இதுதான் சார் உண்மை. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் சார் கேட்கிறோம். இப்படித்தான் சம்பளம் கொடுப்பேன் என்று சொன்னால், ஒட்டுமொத்தமாக செவிலியர்கள் அனைவரையுமே இழிவுப்படுத்துவதுபோல இல்லையா.

முறையாக எங்களுக்கு 7வது ஊதிய கமிசன் போடுவதற்கு முன்பு 34 ஆயிரம் ரூபாய் வரவேண்டும். 7வது ஊதிய கமிசன் போட்ட பின்னர் 44 ஆயிரம் ரூபாய் வரவேண்டும். இதுதான் எங்களது முதன்மையான கோரிக்கை. எங்களுடைய இந்த நியாயமான கோரிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

எங்களை அரசு ஊழியர்களே இல்லை என்று சொல்கிறார்கள். நேஷ்னல் ரூரல் ஹெல்த் மிஷன் (NRHM) ஊழியர்கள் என்கிறார்கள். NRHM என்ற அமைப்புக்கு தனி இயக்குனரகம் இருக்கிறது. அதன் டைரக்டர் மூலமாக விளம்பரம் கொடுத்து, அவர்களே ஆட்களைத் தேர்வு செய்து பணி ஆணை கொடுப்பார்கள். அது தற்காலிக பணி ஆணை. மற்ற மாநிலங்களில் அப்படித்தான் கொடுத்து வருகின்றனர்.


ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழக அரசின் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் செவிலியர்களை பணிக்கு எடுக்கிறார்கள். ஆனால், எங்களை NRHM பணியாளர்கள் என்றும், தமிழக அரசின் பணியாளர்கள் இல்லை என்று கேலி செய்கிறார்கள். எங்களை பணிக்கு தேர்வு செய்து தனியாருக்கு குத்தகைக்கு விடுவதுபோல் கணக்கு காட்டுகிறார்கள்.

செவிலியர்கள் பணி காலியாக உள்ளது என்று சொன்னது தமிழக அரசு. பணிக்கான தேர்வு வைத்தது தமிழக அரசு. சான்றிதழ்களை சரிபார்த்தது தமிழக அரசு. பணிக்கான ஆணைகளை கொடுத்தது தமிழக அரசு. ஆனால் உரிய ஊதியத்தை கேட்டால் நீங்கள் NRHM பணியாளர்கள் என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் NRHM டைரக்டர் விளம்பரம் கொடுப்பார். பணி ஆணை கொடுப்பார். அதில் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை குறிப்பிட்டு, 11 மாதம்தான் பணிக் காலம் என குறிப்பிடுவார்கள்.



இங்கு 11 ஆயிரம் பணியிடம் காலியாக உள்ளது என்று தமிழக அரசு அறிவித்ததால், நாங்கள் முறைப்படி விண்ணப்பித்து, தேர்வு எழுதி வேலைக்கு வந்துள்ளோம். ஆனால் தமிழக அரசு எங்களை  NRHM பணியாளர்கள் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கிறது. அப்படியென்றால் எங்களை  NRHM டைரக்டரே விளம்பரம் கொடுத்து பணிக்கு எடுத்திருக்க வேண்டும். பிறகு ஏன் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் எங்களை பணிக்கு எடுத்தீர்கள்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், கிராம சுகாதார செவிலியர்கள் 3 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்தினார்கள். ஒன்றரை வருட கோர்ஸ் படித்த அவர்களை நேரடியாக பணி நிரந்தரம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு போட்டித் தேர்வும் கிடையாது. ஏன் எங்களை மட்டும் கண்டுகொள்ளவில்லை என்று கேட்டுத்தான் போராட்டம் நடத்தி வருகிறோம்.

போராட்டம் டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்தது. பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்தது. பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் உடன்பாடு ஏற்படவில்லை என்றார்.



அரசுமணி பேட்டி அளித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் செவிலியர்கள் போராட்டத்தில் தலையிட்டது. நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து, போராட்டக் குழு தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. 

-வே.ராஜவேல்
படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்