ஜல்லிக்கட்டு வகைகளும், விதிகளும்
கடந்த வருட பொங்கலை யாராலும் மறக்கமுடியாது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்திய மற்றும் மாநில அரசுடன் போராடி ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை நீக்கினர். ஜல்லிக்கட்டுக்கு மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஜல்லிக்கட்டு என்றால் வாடிவாசலில் திறக்கப்படும் மாட்டை ஒருவன் பிடிக்க வேண்டும் அவ்வாறுதான் நகரவாழ் மக்களுக்கு தெரியும். படங்களில் கூட அதிகம் இதுபோன்ற ஜல்லிக்கட்டைதான் காட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு போன்றே இருக்கும் மற்ற விளையாட்டுகள் பற்றியும் அதன் விதிமுறைகள் என்னவென்றும் பார்ப்போம்.
வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு

இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இது மக்களிடையே நன்கு தெரியப்பட்ட ஒன்றாக இருக்கிறது காரணம் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் இந்த வகை விளையாட்டையே அதிகம் காட்டப்படுகிறது. "வாடிவாசல்" எனும் வாயில் வழியாக காளை திறந்துவிடப்படும். திறந்தவுடன் சீறிக்கொண்டு ஓடும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும் அப்படி சென்றால் அந்த வீரர் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்வார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை ஆகும்.
வேலி மஞ்சுவிரட்டு

இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரபலமாகும். திறந்தவெளியில் காளையின் மூக்குக்கயிறை அவிழ்த்து விடுவார்கள், அது எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓடலாம், வீரர்கள் அதை அடக்கவேண்டும். இந்த விளையாட்டு ஐந்து நிமிடங்களில் இருந்து ஒரு மணிநேரம் கூட நடைபெறும்.
வடம் மஞ்சுவிரட்டு

வடம் என்றால் தமிழில் "கயிறு" என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டின் விதிமுறைகள்:
- போட்டியாளர்கள் இருவரும் (காளை, வீரர்கள்) மருத்துவ பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவர்.
- வாடிவாசலில் இருந்துதான் காளைகள் போட்டிக்கு அவிழ்த்துவிட வேண்டும்.
- போட்டியாளர் மாட்டின் திமிலை மட்டும்தான் பிடிக்க வேண்டும். கழுத்து, கொம்பு, வால் ஆகியவற்றை பிடித்தால் போட்டியாளர் ஆட்டத்தை விட்டு நீக்கப்படுவார்.
- போட்டியாளர் மாட்டின் திமிலை எல்லைக்கோட்டை மாடு தாண்டும் வரை பிடித்திருக்க வேண்டும். அப்படி பிடித்திருப்பவர் வெற்றியாளர் ஆவார்.
- காளை, பிடியாளரை எல்லைக்கோடு தாண்டும் முன்பே தூக்கி வீசிவிட்டாலோ, அல்லது எல்லையை தாண்டும்வரை யாரும் பிடிக்கவில்லை என்றாலோ காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
- காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும். எல்லோரும் பிடித்தால் காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
- காளையை அடிக்கவோ அல்லது எந்தவிதத்திலும் துன்புறுத்தவோ கூடாது.
-சந்தோஷ் குமார்