Skip to main content

இன்ஸ்டாகிராம் கொடுத்த இனிய வாய்ப்பு!

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
இன்ஸ்டாகிராம் கொடுத்த இனிய வாய்ப்பு!

தகவல் தொழில்நுட்பம் உலகத்தை சுருக்கி உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது. வாய்ப்புகளை தேடி அலைந்து, வாய்ப்புக் கிடைத்ததும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

உங்கள் விருப்பப்படி உங்களை வடிவமைத்துக் கொள்ளவும், உங்களை வெளியுலகிற்கு வெளிப்படுத்தவும் தகவல் தொழில்நுட்பம் வசதி செய்துகொடுத்திருக்கிறது.

உதாரணமாக, நீங்கள் எழுத்தாளராக விரும்பினால் உங்கள் எழுத்துத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.

போட்டோகிராபராக, விடியோ கிராபராக என்று எப்படி வேண்டுமானாலும் உங்கள் திறைமையை வெளிப்படுத்தி அதன்மூலம் வாய்ப்புகளைப் பெற இணையம் வசதி செய்கிறது.

இதோ, இன்ஸ்ட்டாகிராமில் தன்னை வெளிப்படுத்தி, உலகப்புகழ்பெற்ற டைம் வார இதழில் இடம்பிடித்திருக்கிறார் 26 வயது பெண்.

பிரேசிலைச் சேர்ந்தவர் லூயிஸா டோர். சிறிய கிராமத்தில் பிறந்த இவர் பிரேசிலில் அழகான பல பெண்கள் தேர்வு செய்யும் மாடலிங்கை விரும்பாமல், அவர்களை படம் பிடிக்கும் வேலையைத் தேர்வு செய்தார்.



ஐபோன் மட்டுமே இவருடைய புகைப்படக் கருவியாக இருந்தது. வெளிச்சத்தை மறைக்கும் சிறிய கருப்பு தடுப்பு மட்டுமே இவர் கூடுதலாக பயன்படுத்தும் சாதனம்.

தான் எடுக்கும் படங்களை இன்ஸ்ட்டாகிராம் சமூகவலைத்தளத்தில் பகிர்வார். இவருடைய படங்களையும், புதிய முயற்சியையும் டைம் வார இதழின் போட்டோகிராபி டைரக்டர் கிரா பொல்லாக் பார்க்க நேர்ந்தது.

வெறும் ஐ போனைக் கொண்டு லூயிஸா எடுத்து வெளியிட்ட போட்டோக்களையும் அதற்கு அவர்
அளித்திருந்த விளக்கத்தையும் பார்த்தார். அதைத் தொடர்ந்து அவரிடம் பேசிய கிரா, டைம் வார இதழில் “முதல்கள்” (ஃபர்ஸ்ட்ஸ்) என்ற தொடரில் இயற்கையான வெளிச்சத்தில் லூயிஸா எடுத்த படங்களை வெளியிட விருப்பம் தெரிவித்தார்.

உலகை மாற்றிய பெண்கள் என்ற தலைப்பில் இவர் எடுத்த புகழ்பெற்ற பெண்களின் படங்கள் வெளியாகி உள்ளன.

ஹிலாரி கிளிண்டனை இவர் படம் எடுக்க சென்றபோது வெறும் ஐபோனுடன் இருப்பதைப் பார்த்து
வியப்படைந்தார். விவரத்தைச் சொன்னதும், போஸ் கொடுத்தாராம். இயற்கை பின்னணியில் இயற்கையான வெளிச்சத்தில் சிறிய வெளிச்ச தடுப்பை மட்டும் பயன்படுத்தி சில வினாடிகளில் படத்தை எடு்தது முடித்தார் லூயிஸா.

டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், பொருளாதார நிபுணர் ஜேனட் யெல்லென், டி.வி.ஸ்டாரும் நடிகையுமான ஓபரா வின்ஃப்ரே மற்றும் 43 பேரையும் இவர் படம் பிடித்துள்ளார்.

தனது இந்தத் தொழில் பிரேசில் குறித்த சில இருண்ட பக்கங்களை தனக்கு அறிமுகப்படுத்த உதவியதாகவும் லூயிஸா கூறியிருக்கிறார்.

பல இனத்தவரும் கலந்த நாடான பிரேசிலில் வெளிப்படும் நிறவெறி, பாலியல் வேறுபாடுகள், சமூக நிராகரிப்பு, வாழ்வதற்கு நடத்தும் போராட்டம் ஆகியவை தனக்கு புரிய வந்ததாக கூறுகிறார்.

தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய இன்ஸ்ட்டாகிராமுக்கு நன்றி தெரிவிக்கிறார் லூயிஸா.


-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்