Skip to main content

பாலியல் அத்துமீறல்... பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்!

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Periyar University registrar dismissed!


 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ளது பெரியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் கோபி. இவர் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு வகுப்பு எடுத்து வருகிறார். அந்த வகையில், விடுமுறைத் தினமான நேற்று முன்தினம் (24/07/2022) மாணவியைப் பல்கலைக்கழகத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு மாணவி வந்துள்ளார். சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார் மாணவி.

 

அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாத சூழலில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கோபி தன்னை ஒரு பெண் அடியாட்களுடன் தாக்கியதாகக் கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். இது தொடர்பான, புகார் கருப்பூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதேநேரம், சம்மந்தப்பட்ட மாணவி தரப்பில் இருந்தும், அதே காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. மாணவியின் மனுவில், ஆராய்ச்சி வகுப்பிற்காக சென்ற தன்னிடம் பல்கலைக்கழகப் பதிவாளர் பாலியல் அத்துமீறலில் மாணவி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக, கருப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோபி அளித்திருந்த புகார் பொய்யானது என்பதும், மாணவியிடம் கோபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருந்தது உறுதியானது என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதையடுத்து, கோபி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை நேற்று (25/07/2022) மாலை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் பாலியல் புகாரில் கைதான கோபியை பெரியார் பல்கலைக்கழகம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்