Skip to main content

ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்துக! மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!

Published on 06/05/2018 | Edited on 06/05/2018
mkstalin


ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

 மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 
 

தமிழக கிராமப்புற-ஏழை-ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்துடன் கொடூர ஆட்டம் ஆடி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். டாக்டர் சீட் பெறும் அளவுக்கு +2 தேர்வில் மதிப்பெண் பெற்றும், நீட் கொடுமையால் மருத்துவம் படிக்க முடியாமல் போன மாணவி அனிதாவின் உயிரை சென்ற ஆண்டு பறிகொடுத்தோம். நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் ஒதுக்கி, தமிழக மாணவர்களையும் அவர்களுக்குத் துணையாக சென்ற பெற்றோரையும் அலைக்கழிக்கச் செய்து, மன உளைச்சலுக்குள்ளான கொடூரத்தால் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியை இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம்.
 

திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால், மாணவரும் அவரது தந்தையும் மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், எர்ணாகுளம் நாளந்தா பள்ளியில் நீட் தேர்வை அந்த மாணவர் எழுதிக் கொண்டிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் அவரது தந்தை கிருஷ்ணசாமி. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மன உளைச்சல்களால் 47 வயதிலேயே தன் தந்தை மரணமடைந்துவிட, அந்த விவரம்கூட அறியாமல், தேர்வு மையத்தில் மாணவர் எழுதிக்கொண்டிருந்தார் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.
 

மருத்துவப் பட்டம் பெற்று டாக்டராகி எத்தனையோ நோயாளிகளின் உயிரைக் காக்கலாம் என்ற கனவில் இருந்த மாணவருக்கு, தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கமும் வேதனையும் காலம் முழுவதும் நீடிக்கும். தாங்க முடியாத சோகத்தில் உள்ள மாணவருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாத அ.தி.மு.க. அரசின் அலட்சியமே அனிதாவின் உயிரையும் கிருஷ்ணசாமி அவர்களின் உயிரையும் பறித்திருக்கிறது. ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல், மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டால், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.