மதுரை ஆதினத்திற்குள் நித்தியானந்தா நுழைய இடைக்கால தடை!
மதுரை ஆதின விவகாரத்தில் தலையிடவும், மடத்திற்குள் நுழையவும் நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், மதுரை ஆதினம் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் 292வது ஆதினமாக அருணகிரிநாதர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு தன்னை 293வது ஆதினமாக அறிவித்துக் கொண்டவர் நித்தியானந்தா. இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மதுரை ஆதினத்திற்கு சென்று அன்னதானம் வழங்கி, பூஜைகள் செய்ய அனுமதி வழங்கவும், அதற்காக காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கவும் கோரி நித்தியானந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேசமயம், நித்தியானந்தா மதுரை ஆதினத்திற்குள் நுழைந்து எந்தவிதமான தொந்தரவுகளையும் செய்யக்கூடாது என மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், நித்தியானந்தா மதுரை ஆதினத்திற்குள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், தமிழக தலைமைச் செயலாளர், இந்து அறநிலையத்துறை செயலாளர், மதுரை ஆதினம் மற்றும் நித்தியானந்தா இதுகுறித்து பதில்மனு அளிக்க உத்தரிவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.