Skip to main content

7 வயது சிறுவனை கடத்திய 15 வயது சிறுவன்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019


தெலுங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில் உள்ள பிஎஸ்ஆர் காலனியில்  அர்ஜுன் என்ற 7 வயது சிறுவன்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் என்று மாயமானான். பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும்  சிறுவனை காணவில்லை.  இந்த நிலையில், சிறுவனின் தந்தையை, மர்ம நபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, ரூ.3 லட்சம் கொடுத்தால் சிறுவனை விட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை, போலீசில் புகார் அளித்தார். போன் எண்ணை கொண்டு விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு, கடத்தியவரையும் கைது செய்தனர். விசாரணையில், கடத்தியவர் 10ம் வகுப்பு மாணவன் என்றும், பணத்திற்காக கடத்தியதாகவும் தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது,  10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் அர்ஜுனை பார்த்துள்ளார். அவரைக் கடத்தி, பின்னர் அவரது குடும்பத்தினரிடம் பணம் பறிக்க  திட்டமிட்டு உள்ளார்.  அர்ஜுனுடன் நட்பாக பேசி, அல்மாஸ்குடாவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் அழைத்துச் சென்று அவரை ஒரு கோவிலுக்குள் அமரவைத்து விட்டு அவரது தந்தைக்கு போன் செய்து மிரட்டி உள்ளார் 10-ம் வகுப்பு மாணவன். அர்ஜுனின் தந்தை ராஜுவிடம் பேசுகையில், 10 ஆம் வகுப்பு மாணவன் தனது குரலை மாற்றி பேசி உள்ளார். போலீசாரை அணுக வேண்டாம் என்று ராஜுவை எச்சரித்து உள்ளார். 

அவ்வாறு செய்தால், அவரது மகன் கொல்லப்படுவார் என்றும் மிரட்டி உள்ளார். 10ம் வகுப்பு மாணவன் 'மைனர்' என்பதால் சிறார் நீதி வாரியத்தை அணுக உள்ளோம். குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து உள்ளோம் என கூறினார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.