Skip to main content

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

Published on 17/05/2025 | Edited on 17/05/2025

 

ED raids TASMAC Managing Director house for 2nd day

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “அமலாக்கத்துறையின் சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்பதை விசாரிக்க முடியாது. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேசநலனுக்கானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது.

பார் உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக வந்த புகார் அடிப்படையிலும், மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (16.05.2025) காலை முதல் சோதனை நடத்தினர். இதற்கிடையே விசாகனை அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 3 மணியளவில் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறையின் தென் மண்டல தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் 2வது நாளாக இன்றும் (17.05.2025) அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 20 மணி நேரத்தையும் கடந்து அமலாக்கத்துறையினரின் சோதனையானது நடைபெற்று வருகிறது. அங்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு உதவியுடன் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று சூளைமேடு, தியாகராயநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்றைய சோதனையின் போது விசாகன் வீட்டருகே உள்ள சாலையோரம் கிழிந்த நிலையில் வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பான ஆவணங்கள் கிடந்தன. அதில் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்ட வார்த்தைகள் அந்த உரையாடலில் இடம்பெற்றிருந்தன. எனவே கிழிந்த நிலையில் இருந்த ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்