‘மகாராஷ்டிரா எங்களுக்கே..’- பிறமாநிலத்தவர்களை அடித்து துரத்திய எம்.என்.எஸ்!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதாகக் கூறி, பிற மாநிலத்தவர்களை விரட்டி அடிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம், சாங்க்லி பகுதியில் உள்ளது குப்வாட். இது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதால் இங்கு அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதேசமயம், இங்கு பிறமாநிலத்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே, மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், சாங்க்லி பகுதியில் பணிபுரியும் பிறமாநிலத்தவர்கள், தங்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டுள்ளதாகக்கூறி அவர்களை அடித்து விரட்டி உள்ளனர். மேலும், அவர்கள் ‘மகாராஷ்டிரம் எங்களுக்கே.. உங்கள் சொந்த மாநிலங்களுக்கு போய் வேலை பாருங்கள்’ உள்ளிட்ட முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ராஜ் தாக்கரே தலைமையிலான இந்த எம்.என்.எஸ். அமைப்பு பலமுறை இதுமாதிரியான தாக்குதல்களில் ஈடுபடுவதில் பிரபலமானது. கடந்த 2008ஆம் ஆண்டு பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இருந்துவந்து மகாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிபவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது சமஜ்வாதி கட்சியுடனான நேரடி மோதலுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.