கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு
பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
கொத்தமங்கலம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 2 ம் வகுப்பு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராசு மகன் அன்பு (6). மையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென அன்புக்கு காய்ச்சல் எற்பட்டதால் கொத்தமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சில சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காய்ச்சல் குறையவில்லை. அதனால் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான்.
அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு அன்புக்கு ரத்த அணுக்கள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டடு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அன்பு பரிதாபமாக உயிரிழந்தான். இதே போல அதே பகுதியில் கடந்த ஒரு மாதம் முன்பு ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதனால் கொத்தமங்கலத்தில் அடுத்தடுத்து சிறுவர்கள் காய்ச்சலுக்கு பலியாகும் சம்பவத்தால் பரபரப்பு எற்பட்டுள்ளது. மேலும் கொத்தமங்கலத்தில் பலர் காய்ச்சல் பாதிப்பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் இறப்புகளை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
- பகத்சிங்