Skip to main content

நான்கு வார்த்தைகளில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள் - அன்புமணி நெகிழ்ச்சி!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

பரக

 

நாடு முழுவதும் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘‘ஏணி தோணி அண்ணாவி நாரத்தை’’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஏணி என்பது அனைவரையும் மேலே ஏற்றி விட்டு, அதே இடத்தில் நின்று கொண்டிருக்கும். தோணி என்பது நீர் நிலைகளை கடக்க நினைக்கும் அனைவரையும் கரையேற்றி விட்டு, தண்ணீரிலேயே கிடக்கும். அதே போல் அன்னாவி, அதாவது ஆசிரியர் தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை உயர்ந்த இடத்திற்கு அனுப்பி விட்டு, அவர் மட்டும் அதே இடத்தில் இருப்பார். நார்த்தங்காய் வயிற்றுக்குள் சென்றால் மற்ற உணவுப் பொருட்களை செறிக்க வைத்து விட்டு, அது மட்டும் செறிக்காமல் வயிற்றில் இருக்கும். ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம் என்பதை 4 வார்த்தைகளில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். அது தான் ஆசிரியர் சமுதாயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.

 

இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

 

ஆனால், ஆசிரியர்களும், ஆசிரியர்களாக தகுதி பெற்றவர்களும் இன்றைய நிலையில் மகிழ்ச்சியாக இல்லை. 8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப் படவில்லை; தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீது போட்டித் தேர்வு திணிக்கப்படுகிறது; குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் அதே நிலையில் தான் வாடுகின்றனர். அவர்களின் நிலை முன்னேற்ற வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி போராடும்; விரைவில் கண்டிப்பாக வெற்றி பெறும்.

 

அனைவரையும் உயர்த்தும் ஆசிரியர்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும்; அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்ற அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களால் மாணவர்கள், அவர்களால் இந்த சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.