Skip to main content

“கமல், சாருஹாசன் பெயரையும் சுகாசினி பெயரையுமா பயன்படுத்த முடியும்..?” - கே.என்.நேரு 

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

DMK K N Nehru press meet after gramasaba meeting in trichy


தமிழகம் முழுவதும் ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’  கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (23.12.2020) திருச்சி உறையூர், குளத்தூர் பகுதியில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்துகொண்டு, கிராமசபை கூட்டத்தில் பெண்களிடம் கருத்து கேட்பும் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் உள்ளிட்டவற்றையும் கேட்டறிந்தார். 
 


இதில், சாலை வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தி.மு.க.வின் பல திட்டங்கள் தற்போது அ.தி.மு.க. அரசில் நிறுத்தப்பட்டுள்ளதால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பெரிய அளவில் குடும்பங்களை பாதிக்க வைத்திருக்கிறது. எனவே, விரைவில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்தனர். 

 


அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற இந்தக் கூட்டத்தின் நோக்கம் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளது. எனவே, அதனை நாங்கள் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அரசை நிராகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.

 

DMK K N Nehru press meet after gramasaba meeting in trichy

 

மேலும், மினி கிளினிக்குகள் திறக்கப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “தமிழகத்தில் ஏற்கனவே போதுமான அளவிற்கான மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாத நிலையில், தமிழக அரசு எத்தனை மருத்துவர்களும் செவிலியர்களும் தற்போது பணி அமர்த்தி உள்ளது என்பது குறித்து தி.மு.க. தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார், ஒரு அறிக்கையும் கேட்டிருக்கிறார். இந்நிலையில், இது எந்த அளவிற்கு செயல்படும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்” என்றார். 



கமல் உள்ளிட்டவர்கள் எம்.ஜி.ஆர். பெயரையும், அண்ணாவின் பெயரையும் பயன்படுத்துகிறார்களே இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, “கமல் உள்ளிட்டவர்கள் எம்.ஜி.ஆரின் பெயரையும், அண்ணாவின் பெயரையும் மட்டுமே பயன்படுத்த முடியும். அதை விட்டுவிட்டு சாருஹாசன் பெயரையும் சுகாசினி பெயரையுமா பயன்படுத்த முடியும்” என்று பேசினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.