
திருச்சியில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வனை சந்தித்துப் பேசியிருந்தார். திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த சந்திப்பு குறித்துப் பேசிய வைகைச் செல்வன், ஆளும் கட்சியாக இருக்கும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்” என்றார். ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நட்பின் அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றது. அரசியல் எதுவும் பேசவில்லை என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற விசிக கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஆளும் கட்சியில்(திமுக) இருக்கும்போதே நமக்கு நெருக்கடி இருப்பது உண்மைதான். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசியல் கட்சிக் கொடிகளை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். உடனே காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எந்த கட்சிக் கொடிகளை அகற்றுகிறார்களோ இல்லையோ, எங்கு விசிக கொடி இருக்கிறது என்று தேடி அகற்றுகிறார்கள். சிதம்பரத்திலேயே விசிக கொடிக் கம்பத்தை புல்டோசர் வைத்து இடிக்கிறார்கள். அதேபோன்று பெரம்பலூர், கடலூர் என்று எங்கெல்லாம் விசிக கொடி இருக்கிறதோ அங்கெல்லாம் அகற்றுகிறார்கள். ஆனால் மற்ற கட்சிக் கொடிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் விசிக கொடிகளை அகற்றுவோம் என்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவ்வளவு காழ்ப்புணர்ச்சி அதிகார வர்க்கத்திடம் மேலோங்கி இருக்கிறது.
அரசியலில் நிதானம், சகிப்புத்தன்மை, பொறுமை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார் என்று அடையாளம் காண்பதற்கு ஒரு தெளிவு தேவை. கொள்கை அடிப்படையில் நமது பகைவர்கள் யார் என்று முடிவு செய்வதில் ஒரு துணிவு தேவை. அதனால் தான் பாஜக, பாமக இருக்கும் அணியில் நாங்க சேர மாட்டோம் என்று வெளிப்படையாகவே முடிவெடுத்துள்ளோம். அதிமுகவுடன் சேரலாம் பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால், அதிமுகவுடன் பாஜக இருப்பதால் அவர்களுடனும் சேரமுடியாது. ‘ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் இரண்டு பக்கத்தையும் திறந்து வைத்தால் தானே, நான் கேட்பதை கொடுக்கவில்லை என்றால் அந்த பக்கம் போய்விடுவேன் என்று மிரட்ட முடியும்.. அப்படித்தானே அரசியல் செய்ய மிடியும்..” என்று கேட்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட அரசியல் தேவையில்லை. அதற்காக ஒன்றும் நாங்க கட்சி நடத்தவில்லை. எங்களுக்கு அம்பேத்கரின் அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்”என்றார்.