
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,500- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 50,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் மூன்றாவது கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்றது. மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக விலைகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து தங்களின் சேவையை ஆற்றி வருகிறார்கள். சில இந்தக் கரோனா கொடுந்தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. குறிப்பாகச் சுகாதாரப் பணியாளர்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தில்லியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணான இம்ரானா என்பவர் கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளித்து கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் கிருமி நாசினி தெளிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.