Skip to main content

போராடும் நர்சுகளின் வேதனை குரல்!

Published on 28/11/2017 | Edited on 29/11/2017
போராடும் நர்சுகளின் வேதனை குரல்! 



அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,

சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாங்கள் அரசிடம் இருந்து உத்தரவு வரும்வரை இங்கிருந்து கலைந்து செல்வது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். முறைப்படி போலீசாரிடம் உள்ளிருப்பு போராட்டம் என கடிதம் அளித்துதான் போராட வந்தோம். ஆனால், முதலில் டி.எம்.எஸ். வளாகத்தின் கேட்டை திறக்கவில்லை. 2 ஆயிரம் பேர் கூடியதால் நாங்கள் சாலையில் நின்றோம். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது நாங்கள் சாலை மறியல் செய்கிறோம் என்று கூறிவிட்டனர். பின்னர்தான் கேட்டை திறந்துவிட்டனர்.

போராட்டம் இரவிலும் நீடித்தது. நர்சுகளை வெளிய செல்ல விடாமலும், வெளியில் இருந்து அவர்களுக்கு உதவி செய்வதற்கு யாரையும் உள்ளே விடாமலும் போலீசார் தடுத்து நிறுத்தினர். குடிநீர், உணவு கிடைக்காமல் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மழையிலும், பனியிலும், கடும் குளிரிலும் இங்கேயே அமர்ந்து இருந்தனர். விடிய விடிய நர்சுகள் போராட்டம் தொடர்ந்ததால் போராட்டத்தை முடக்க பல்வேறு தடைகள் மருத்துவ துறையால் ஏற்படுத்தப்பட்டன.

இங்குள்ள கழிவறைகள் பூட்டப்பட்டன. இதனால் அலுவலக கழிவறைகளை பயன்படுத்தி வருகிறோம். உணவு, குடிநீர் கிடைக்காமலும், கழிவறை மூடப்பட்டதாலும் பல இன்னல்களோடு இன்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று போலீசார் மூலம் பேசுகின்றனர். எங்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து போன், வாட்ஸ் அப் மூலம் பணிக்கு வரவில்லை என்றால், பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டுவிடுவோம். சம்பளம் பிடிக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கின்றனர். எங்களுக்கு மேலே உள்ள மருத்துவர்கள் உங்கள் வீட்டு முகவரியை கொடுங்கள், பணி நீக்கத்திற்கான ஆணையை அனுப்புகிறோம் என்று மிரட்டுகிறார்கள்.



போராட்டம் நடத்தும் எங்களை சந்திக்க வரும் மீடியாக்களை உள்ளே விடவில்லை. வெளியே போய் மீடியாக்களிடம் பேசுங்கள். ஆனால் திருப்ப உள்ளே விடமாட்டோம் என்று எங்களிடம் போலீசார் கூறிவிட்டனர்.

2015ல் வேலைக்கு வந்தபோது 7,700 ரூபாய் ஊதியம் கொடுத்தார்கள். வருடம் 500 ரூபாய் ஊதிய உயர்வு என்றார்கள். அனால் இன்று வரை 7,700 ரூபாய்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி கேட்டால் அடுத்த மாதம் கொடுப்போம், அடுத்த வருடம் கொடுப்போம் என்கிறார்கள். வங்கிக் கணக்கில்போட்டுவிட்டோம் என்கிறார்கள். வங்கியில் கேட்டால் உங்கள் கணக்கில் என்ன வந்ததோ, அதை போட்டுவிட்டோம் என்கிறார்கள். இன்னும் சில அதிகாரிகள் சொல்கிறார்கள், அரசிடம் பணம் இல்லை. இவ்வளவு பேருக்கும் உரிய ஊதியத்தை கொடுத்தால் பணத்திற்கு எங்கே போவது. அதனால்தான் இப்படியே வைத்துள்ளோம் என்று சொல்கிறார்கள். தமிழக அரசு வேறு எந்த வேலைக்கும் ஆட்களை  எடுக்காமல் இருக்கிறார்களா?

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்கிறார்களே, அது யார் வீட்டு பணம். அதனால் என்ன பிரயோஜனம். அதற்கு எங்கியிருந்து பணம் வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு எழுதி வேலைக்கு வருபவர்கள் முழு அரசு ஊதியத்துடன்தானே வேலைக்கு வருகிறார்கள். அதேபோல் எங்களுக்கும் 34 ஆயிரம் ரூபாய் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். எங்கள் கோரிக்கையில் என்ன தவறு. 3 வருட டிப்ளமோ, 4 வருட டிகிரி, எம்எஸ்சி 2 வருடம் என 6 வருடம் கோர்ஸ் முடித்து வரும் நாங்கள் 7,700 வாங்குகிறோம். ஊதிய உயர்வு அளிக்க மறுக்கின்றனர்.



இந்த ஊதியம் தான் தருவார்கள் என்று தெரிந்தால் 3 வருட, 5 வருட படிப்பு படிக்காமல் பேசாமல் 8 ஆயிரம் ரூபாய்க்கு துப்புரவுத் தொழிலாளியாக சேர்ந்திருப்போம். நாங்கள் இன்று 3 வருட இன்கிரீமெண்ட்டோட சேர்த்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கியிருப்போம்.

கர்ப்பிணி பெண்களின் இறப்பு விகிதமும், ஒரு வருடத்திற்கு கீழே உள்ள பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் எந்த நாட்டில் குறைந்துள்ளதோ, அந்த நாடு சுகாதாரத்துறையில் சிறப்பாக இருக்கிறது, வளர்ந்திருக்கிறது என்று சொல்வார்கள். 2015க்கு பிறகு நாங்கள் வேலைக்கு வந்த பிறகுதான் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்தது. 

குறைவான ஊதியத்தில் நிறைவான வேலை செய்தோம். அதற்காக துறைக்கான அமைச்சர் விஜயபாஸ்கர் விருது வாங்கினார். கவுரவிக்கப்பட்டார். நாங்கள் இன்னும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியப்படியே நிற்கிறோம்.

படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்

சார்ந்த செய்திகள்