Skip to main content

சிறுமி பாலியல் வன்கொடுமை.. மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது..

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

three arrested under pocso act in dindigul

 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சிலுவத்தூர் அருகே உள்ள ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கவேல். இவர், 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்ததை தெரிந்துகொண்டு, அவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இதனை தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், குருநாதன் ஆகியோரும் அந்த மாணவியை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி மூன்று பேரும் மாணவியைப் பலமுறை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

 

அந்தச் சிறுமியும் உயிருக்குப் பயந்து இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியை தங்கவேல் தனியாக அழைத்துச் செல்வதைப் பார்த்து மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்களிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் வடமதுரை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தென்றல், வழக்குப் பதிவுசெய்து தங்கவேல், பெருமாள், குருநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.