Skip to main content

ஆளுங்கட்சிக்கு ‘பேக்கேஜிங்’ பார்த்த திருச்சி உளவுத்துறை அதிகாரிகள்!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

trichy admk

 

எந்தவொரு நாடாக இருந்தாலும், மாநிலமாக இருந்தாலும் உளவுத்துறையே அதன் பாதுகாப்பின் முதுகெலும்பாகும். இவர்கள், மாவட்டம் மற்றும் தாலுகா வாரியாக காவல்துறை தலைமையகம் மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றிக்கொண்டு, அன்றாடம் நடக்கும் குற்றச்செயல்கள் முதல் நாட்டு நடப்பு மற்றும் அரசியல் சூழல்கள் வரை அவ்வப்போது தங்கள் மேலிடத்திற்கு தகவல்களை தெரிவிப்பார்கள். இதனை அடிப்படையாகக்கொண்டே அரசும் முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் புதிய அரசு பதிவியேற்ற உடனேயே இந்த உளவுத்துறை காவலர்களின் முந்தைய செயல்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவர்களைப் பணியிடமாற்றம் செய்வதோ அல்லது அதே இடத்தில் நீட்டிக்க வைப்பதோ உண்டு. 

 

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டு உளவுத்துறை அதிகாரிகளை உடனே பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறை வட்டாரத்தில் இருந்து தற்போது கசிந்துள்ளது. அதாவது, திருச்சி மாநகர உளவுத்துறையில் பணியாற்றி வரும் கணித மேதையின் பெயர் கொண்ட ஆய்வாளரும், அதே பிரிவில் பணியாற்றும் ‘மணக்கும்’ சிரிப்பு நடிகரின் பெயர்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளரும் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திருச்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்காக களமிறங்கி வேலை பார்த்ததாகவும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் வீக்காக உள்ளது? 

 

அதிமுக வேட்பாளர்கள் தங்கள் நிர்வாகிகள் மூலமாக ஓட்டுக்காக ஒப்படைத்த பணம் முழுமையாக பொதுமக்களை சென்று சேர்ந்ததா? போன்ற தகவல்களை அவ்வப்போது சேகரித்து, அந்தந்த அதிமுக வேட்பாளர்களுக்குத் தெரியப்படுத்தி வந்ததாகவும், தனியார் நிறுவனங்களைப் போல அவர்களுக்காக ‘பேக்கேஜிங்’ அடிப்படையில் பணியாற்றியதாகவும், இதற்காக, அந்த உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் ஒவ்வொரு வேட்பாளரிடமிருந்தும் பல லகரங்களைக் கூலியாக பெற்றதாகவும் அதிர்ச்சித் தகவல்களைக் கசிய விடுகிறது திருச்சி காவல்துறை வட்டாரம். காவல்துறையின் அந்த 2 கருப்பு ஆடுகளையும் பின்னின்று இயக்கியது இதே திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவில் இதற்கு முன்பு உதவி ஆணையர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற நான்கெழுத்து பெயர்கொண்ட அதிகாரியும், அவருக்கு முன்பு அதே சீட்டில் இருந்து ஓய்வுபெற்ற மூன்றெழுத்து அதிகாரியும்தான் என அடித்துக் கூறுகிறது விபரமறிந்த அந்த வட்டாரம். 

 

காரணம், பணி ஓய்விற்கு பிறகும் தங்களின் அரசியல் தொடர்புகள் மூலம் காரியங்கள் சாதித்து, அதன் மூலமும் அவர்கள் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே, தற்போது திமுக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற அந்த இரு அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டிய சிலர் மூலம் திமுக முக்கியப் புள்ளிகள் சிலரை அணுக முயற்சி செய்து வருவதாகவும், அவர்கள் மூலமாக அந்த 2 கருப்பு ஆடுகளும் இதே உளவுத்துறையில் தொடர முயற்சி செய்து வருவதாகவும் கூறும் காவல்துறை வட்டாரம், ‘அந்த இருவரையும் உடனே களையெடுத்தால் மட்டுமே திருச்சி சிட்டியில் காவல்துறையால் சிறப்பாக செயல்பட முடியும்’ எனவும் சைரன் அடிக்கிறது. திருச்சி மாநகரக் கவல்துறையின் இந்தப் புலம்பல்கள் புதிய ஆட்சியாளர்களின் காதுகளை எட்டுமா...?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.