திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவர் தோல் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த தோல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தோல் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
காவல்நிலைய ஆய்வாளர் யுவராணி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கீழ்கன்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரதீப், முருகன், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஆஜுபாஷா ஆகிய மூன்று பேர் தோல்களை திருடிய சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னவரிகம், பெரியவரிகம், துத்திப்பட்டு, கன்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளுக்குள் புகுந்து பலமுறை தோல் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த 20 லட்சம் மதிப்பிலான தோல் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.