!['Punishment sure'- Sasikala went to Koda Nadu after 7 years](http://image.nakkheeran.in/cdn/farfuture/AsgQQuGnqF1GY5Vp2_LgcXuU3_zJA4uYdwGaFpmVtrs/1705629954/sites/default/files/inline-images/a4350.jpg)
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜெயலலிதா தெய்வமாக நின்று நிச்சயமாக தண்டனை பெற்றுத் தருவார் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறக்கப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வி.கே.சசிகலா விமான மூலம் கோவை வந்தார். அங்கிருந்து காரில் சென்றார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா கொடநாடு சென்ற நிலையில் எஸ்டேட்டில் பணியாற்றும் ஊழியர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ''ஜெயலலிதா இல்லாமல் கொடநாட்டிற்கு வரும் சூழ்நிலை ஏற்படும் என நினைக்கவில்லை. இந்த கொடநாடு கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்களுக்கு ஜெயலலிதா தெய்வமாக இருந்து அவருடைய ஆத்மா தண்டனை பெற்று தரும். இங்கு காவலாளியாக இருந்த ஒரு நல்ல மனிதர். அவர் இந்த இடத்தில் உயிரை விட்டுள்ளார். நிச்சயமாக உண்மையான குற்றவாளி யார் என்பதை ஜெயலலிதா தெய்வமாக இருந்து நிச்சயம் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பார். பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சி விரைவில் வெற்றி பெறும். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்'' என்றார்.