
போராடுகிறவர்களை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்ற விதத்தில் ரஜினிகாந்த் பேசியிருப்பது அவருக்குள் இருக்கும் சர்வாதிகார மனநிலையையே வெளிப்படுத்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை வேறு ஊர்களுக்கு மாற்றுவதென்று எடுக்கப்பட்டுள்ள முடிவு வரவேற்க்கத்தக்கது. இந்த முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக அமைந்திருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறோம்.

ஐபில் போட்டியில் எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது தமிழக அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதுதொடர்பாக போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
காவல்துறை ஏவிய வன்முறையை மூடி மறைத்துவிட்டு காவலர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அப்பாவி மக்கள் மீது ஒவ்வொரு நாளும் காவல்துறையினர் ஏவி வரும் வன்முறைகள் அவருக்குத் தெரியாதா? போராடுகிறவர்களை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்ற விதத்தில் அவர் பேசியிருப்பது அவருக்குள் இருக்கும் சர்வாதிகார மனநிலையையே வெளிப்படுத்துகிறது என்பதை அவருக்கு சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.