வெளிமாநில தேர்வு மையங்களுக்கு தமிழக மாணவர்களை அனுப்பி அவர்களுடைய மனநிலையைச் சிதைப்பதா? நீட் தேர்விலிருந்து உடனே விலக்களிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமநிலையிலான வாய்ப்புகளை உருவாக்கி, அதனடிப்படையில் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிறவர்களில் இருந்து தகுதியானவர்களை அடையாளம் காண்பதே சமூகநீதியின் இலக்கணம். சமநிலையிலான வாய்ப்புகள் (Level Playing Field) இல்லாத ஏற்றத்தாழ்வானப் போட்டிகளின் களமாக இருக்கிறது மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு. மத்திய அரசின் கல்வி வாரியத்தின்கீழ் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடைபெறுகிறது என்பதிலிருந்தே, மாநில அரசின் கல்வித் திட்டம் இரண்டாம்பட்சமாகக் கருதப்படுகிறது என்பதை உணரமுடியும்.
அதனால்தான், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்து 1170 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழகத்தின் கிராமப்புற - ஒடுக்கப்பட்ட சமுதாயத்து ஏழை மாணவி அனிதாவின் மருத்துவக் கனவு நிறைவேறாமல், நீட் தேர்வு எனும் சுருக்குக் கயிற்றால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இன்னொரு அனிதா பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையுடன் நீட் எனும் பாரபட்சமான போட்டித்தேர்வு முறையை தி.மு.க தனது தோழமைச் சக்திகளுடன் இணைந்து, தொடர்ந்து எதிர்த்துக் களம் கண்டு வருகிறது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பதே நமது முதன்மையான நோக்கம். மருத்துவப் படிப்பிலும், மருத்துவ சிகிச்சையிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ள நிலையில், நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்படுவதால், தமிழ்நாட்டுக்கு இந்த நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் மத்திய அரசின் அலட்சியத்தால், தூங்கிக் கொண்டிருக்கின்றன.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் தங்கள் வசதிக்கு மீறி நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளன. போட்டித் தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான பாடத்திட்டம், கட்டமைப்பு வசதிகள், பயிற்சி ஆகியவற்றுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு காலமாவது தேவைப்படும் என கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதை கவனத்தில் கொள்ளாமல் அ.தி.மு.க. அரசு அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதுபோல, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.
எனவே, மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் எந்தப் பிடிவாதமும் காட்டாமல், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவினை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும். எதிர் கட்சிகள் ஒத்துழைப்புடன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அ.தி.மு.க. அரசு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அரசியல் சாசனத்திற்கும், இயற்கை நீதிக்கும் புறம்பாக இளம்வயது மாணவ - மாணவியர் மீது மனரீதியான தாக்குதலை நடத்தி, சமூகநீதியை சிதைக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு: வெளிமாநில தேர்வு மையங்களுக்கு தமிழக மாணவர்களை அனுப்பி அவர்களின் மனநிலையைச் சிதைப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சார்ந்த செய்திகள்
Next Story
'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
— M.K.Stalin (@mkstalin) April 27, 2024
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால்,…
Next Story
'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.
பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi’s toxic speech is vile and highly deplorable. Fearing public anger against his failures, Modi has attempted to whip up religious sentiments and resorted to hate speech to avoid what seems to be an imminent defeat. Hate and discrimination are the real… https://t.co/MA9OeaVYIi pic.twitter.com/SmM9yHmryT
— M.K.Stalin (@mkstalin) April 22, 2024