Skip to main content

வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும்! - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்! 

Published on 27/01/2021 | Edited on 27/01/2021


tn ec.jpg 

 

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. 

 

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 

 

இந்நிலையில், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் புரட்சித் தலைவி அம்மா பேரவையின் பொறுப்புச் செயலாளர் ஆர்.சதாசிவம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

 

மனுவில், கூவம் ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வழங்கிய மாற்று குடியிருப்பின் மூலம், ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த  4188 பேரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 2871  பேரும், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

 

அவ்வாறு அவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த பின்னரும், அவர்களது பெயர்கள் இன்னும் இந்த தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையர், சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும், கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் நீக்கப்படாமல் உள்ளது.

 

கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டும், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டும், குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்ட திருத்த வாக்காளர் பட்டியலின் படி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், துறைமுகம், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து குடிபெயர்ந்த 12,032 வாக்காளர்களின் பெயர், சம்மந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் சரி செய்யப்படும்.’ என உத்தரவாதம் அளித்தார். 

 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.

Next Story

வேட்புமனு தாக்கல் செய்த தயாநிதி மாறன் (படங்கள்)

Published on 27/03/2024 | Edited on 27/03/2024

 

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஸ்டார் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்தார். செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகம் 8ல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிற்றரசு வெற்றியழகன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.