Skip to main content

கொட்டித்தீர்த்த மழை! இறந்தவர் உடலை எரிக்க மறுத்த சாதி ஆணவம்!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

வேலூர் அருகே ஆதிக்க சாதியினர் செல்ல அனுமதிக்க மறுத்ததால், இறந்தவரின் உடலை பாலத்தில் கயிறுகட்டி இறக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி கிளப்பிய பரபரப்பே இன்னமும் ஓயவில்லை. அதற்குள் மதுரையில் வெடித்திருக்கிறது மற்றொரு சாதி ஒடுக்குமுறை விவகாரம்.  

 

madurai funeral issue

 

 

மதுரை மாவட்டம் சுப்பலாபுரத்திற்கு அருகேயுள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல், வயது 50. ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சண்முகவேலின் உறவினர்கள், அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரிக்க முற்பட்டபோது, கடுமையாக மழைபெய்தது. அது திறந்தவெளி சுடுகாடு என்பதால், எரியூட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே நெருப்பு அணைந்துபோனது. மாற்றுவழிகளை மேற்கொண்டும் பயன் தரவில்லை.

இதையடுத்து, அங்கிருக்கும் வேறு சாதியினரிடம், நிலைமையை விளக்கி, அவர்களது சுடுகாட்டில் சண்முகவேலின் உடலை எரியூட்ட அனுமதிகேட்டபோது  மறுத்துவிட்டனர். வேறுவழியின்றி, சண்முகவேலின் பாதி எரிந்தநிலையில் இருந்த உடலை, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து அவரது உறவினர்கள் கிளம்பியிருக்கின்றனர்.

இதே பேரையூர் கிராமத்தில் மற்ற சமுதாய மக்களின் சுடுகாடு எரியூட்டும் தளம், மேற்கூரை, சுற்றுச்சுவர் என பாதுகாப்போடு இருக்கும் நிலையில், ஆதிதிராவிடர் சமுதாயத்தினரின் சுடுகாட்டில் இதுபோன்ற எந்தவித பாதுகாப்பு வசதியும் செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

சாவிற்குப் பிறகும் ஒரு மனிதரின் கண்ணியத்தை விலைபேசும் சாதியத்தின் இந்தக் கொடூர ஒடுக்குமுறை தொடர்பாக, சுடுகாட்டில் இருந்தபடியே சண்முகவேலின் உறவினர்கள் வீடியோ பதிவாக எடுத்து வெளியிட்டனர். அதில், “உடலை எரிக்க ஆதிக்க சாதிக்காரர்களிடம் அனுமதி கேட்டோம், மறுத்துவிட்டனர். சாதி ஒடுக்குமுறை எங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட மறுக்கிறது. எல்லா விதமாகவும் சாதி ஆணவம் இங்கே தலைவிரித்தாடுகிறது. அது சுடுகாட்டில் வந்து நிற்கிறது. எங்கள் நிலையைப் பாருங்கள். அரசுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்” என்று கும்பிட்டபடி கண்ணீர்வடிக்கின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், பேரையூர் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர். ஆனால், பேரையூர் காவல் ஆய்வாளர் எந்தவித வழக்கும் பதிவுசெய்யாமல், சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.

வேலூரில் சுடுகாட்டு விவகாரத்தில் சாதி ஒடுக்குமுறை நடந்தபோது, இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், “மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், காவல்நிலையங்கள் என எல்லாமுமே அனைத்து சாதியினருக்கும் பொதுவானவையாக இருக்கும்போது, சுடுகாட்டில் மட்டும் எதற்காக சாதி வித்தியாசம் பார்க்கிறார்கள். அரசே சாதியை ப்ரமோட் செய்கிறதா?” என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாதிக் கொடுமைகளுக்கு என்றுதான் தீர்வு வருமோ!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.