Skip to main content

டிக்டாக் போலி ஹீரோக்கள்... தண்டம் விதித்து அமுக்கியது வனத்துறை!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

tiktok persons  forest officers tenkasi district


தற்போதைய கரோனா தொற்று கால ஊரடங்கில் நாடே வீட்டிற்குள் முடங்கிப் போயிருக்கிறது. வேலை இல்லை. நேரப் போக்கிற்காக இளந்தாரிகள் தேவையின்றி வெளியே ஊர் சுற்றி மாட்டிக் கொண்டு தண்டத் தொகையும் கட்டி வருகின்றனர். ஆனால் கிராமங்களின் நிலைமை அப்படி இல்லை. காட்டிற்குள் வேட்டையாடவும் ஆடு புலி ஆட்டம் நடத்தவும் கிளம்பி விடுகிறார்கள். பலர் டிக்டாக் மோகத்தில் கிடப்பதையும் அது தொடர்பான வெரைட்டியான டிக்டாக் வீடியோக்கள் புற்றீசல் போலப் பெருகி வருவதும் அதிகரித்துள்ளது. அதில் சில, விபரீதத்திலும் முடிவதுண்டு.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகிலுள்ள மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், மாரிசாமி, ஆனந்த்ராஜ், ஆனந்தகுமார், உள்ளிட்ட நான்கு வாலிபர்களுக்கும் யோசனை வித்தியாசமாகவே உதித்திருக்கிறது. இவர்களின் ஒருவர் 12- ஆம் வகுப்பு மாணவன். இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் கிராமத்தின் பாறை பகுதியில் உள்ள பூம்பாறை ஏரியாவில், இரண்டு நாட்களுக்கு முன்னர் வீர தீரச் செயல் ஒன்றை நடத்தப் போவதாக, சிறுத்தை வேட்டைக்குச் செல்வதாக டிக்டாக்கில் ஒரு போலி செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த விஷயம் அருகிலுள்ள கோவில்பட்டி வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வரவே அவர்களைப் ஃபாலோ செய்திருக்கிறார்கள். இந்த நான்கு பேர்களும் மைப்பாறைக் குகையிலிருக்கிற சிறுத்தையை வெளியே வரவழைக்கும் வகையில் உள்ளே நெருப்பு வைத்திருக்கிறார்கள். அந்த நெருப்பு சீறிக் கொண்டு வெளியே வருகிற அளவுக்கு ஸீன் செட்டப் செய்தவர்கள் சிறுத்தை வெளியே வந்தால் அதை அடித்து வீழ்த்த நான்கு பேர்களும் தடியுடன் வீராப்பாக நிற்பது போன்று நடித்து வீடியோ எடுத்தவர்கள், அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர்.
 

http://onelink.to/nknapp


இந்த 4 பேரையும் வளைத்துப் பிடித்த கோவில்பட்டி வனத்துறை அதிகாரிகள், விசாரணைக்காக புளியங்குடி வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின், வனவர் அசோக்குமார், வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், கோபிநாத் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தியதில், நான்கு பேரும் வனப் பகுதியில் வேட்டையாட முயற்சி செய்ததையும், டிக்டாக்கில், வேட்டையாடச் செல்வதாக பொய்யான செய்தி வெளியிட்டதையும் ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து நெல்லை மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி நான்கு பேர்களுக்கும் தலா 30 ஆயிரம் வீதம் மொத்தம் 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்று போலி செய்திகளை டிக்டாக்கில் வெளியிட்டால் வனத்துறைச் சட்டப்படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும் என்கிறார் வன அலுவலர் ஸ்டாலின்.

டிக் டாக் போலி ஹீரோக்களுக்கு ஆப்பு அடித்திருக்கிறது வனத்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

காட்டுக்குள்ளிருந்து வந்த சத்தம்; சுற்றி வளைத்த அதிகாரிகள் - காத்திருந்த அதிர்ச்சி

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Attempt to cut down 6 sheep in Veerichettipalli reserve forest area

 

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  கல்லப்பாடி, விரிச்செட்டிபள்ளி கிராமங்கள். இங்கு காப்புக்காட்டு வனப்பகுதி உள்ளன. இந்த காப்புக்காட்டு பகுதிக்கு காட்டு யானைகள் உட்பட வன விலங்குகள் வந்து செல்வது வழக்கம். இந்த காப்புக்காட்டில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இதனால் கல்லப்பாடி முதல் விரிச்செட்டிபள்ளி வரை உள்ள வனப்பகுதியில் குடியாத்தம் வனத்துறையினர் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அதோடு இங்கு ஆடு, மாடுகளை மேய்க்க வரும் பொதுமக்களும் காட்டுக்குள் வித்தியாசமாக ஏதாவது தெரிந்தால் வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்.

 

இந்நிலையில் இன்று விரிச்செட்டிபள்ளி காப்புக்காட்டுப் பகுதியில், மரம் அறுக்கும் சத்தம் கேட்டுள்ளது. மரம் கீழே விழும் சத்தம் கேட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குடியாத்தம் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் காப்புக்காட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஆறு செம்மரங்களை வெட்டியுள்ளதும், அதனை 11 துண்டுகளாக்கியதும் தெரியவந்தது. கடத்த முயன்ற 11 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

 

Attempt to cut down 6 sheep in Veerichettipalli reserve forest area

 

காப்புக்காட்டுக்குள் வந்து செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் யார்? இங்கு செம்மரங்கள் இருப்பது அவர்களுக்கு எப்படி தெரிந்தது? மரம் வெட்டும் வரை வனத்துறை கார்டு, ரேஞ்சர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்? இதுதவிர காட்டுக்குள் வேறு ஏதாவது செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.