Skip to main content

கர்ப்பிணி மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை; சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
Husband lost their life after  incident pregnant wife and daughter

தேனி அருகே அம்மாச்சியா புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(37). இவரது மனைவி அசிதா(32). சதீஷ் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், அசிதா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது. இதையடுத்து இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் அசிதா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அரண்மனை புதூர் வசந்தம் நகரில் தனது குடும்பத்துடன் சதீஷ் வசித்து வருகிறது. கடந்த 4 மாதங்களாக சதீஷ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் என்றும், யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  நேற்று முன் தினம் சதீஷ் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமலேயே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கப்பைக்கத்தினர், அவர்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அசிதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அசிதாவும், அவர்களது 5 வயது மகளும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். உள்ளே சதீஷ்குமாரும் தூக்கில் பிணமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சதீஷ்குமார் மனைவி ஆசிதா மற்றும் பெண் குழந்தை இருவரது கழுத்தையும் அறுத்து படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. மேலும் வீட்டைச் சோதனையிட்டபோது போலீசாருக்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், “நல்ல அப்பா, நல்ல குடும்பம், நிம்மதியற்ற வாழ்க்கை. ஆனால் வாழப் பிடிக்கவில்லை. எனக்குப் பிறகு எனது மனைவி மற்றும் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் கூட அழைத்துச் செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். எனது தங்கைக்கு நான் எதுவுமே செய்யவில்லை; பெற்றோர்கள் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

குடும்ப பிரச்சனைக் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசார் விசாரணைத் தொடர்ந்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்