Skip to main content

அரசு பள்ளியின் மாடியிலிருந்து கீழே விழுந்த மாணவி; மருத்துவமனையில் அனுமதி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

girl who fell from floor government school was admitted hospital

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் - சங்கீதா தம்பதியின் மகள் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் பள்ளி மாணவிகள் நடன நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். மாணவியுடன் படிக்கும் தோழி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். அப்போது அந்த தோழி மொபைல் ஃபோனை மாணவியிடம் கொடுத்து வீடியோ எடுக்கச் சொல்லியுள்ளார். அதன் பெயரில் இந்த மாணவி வீடியோ எடுத்ததாகவும், அப்போது பெண் ஆசிரியர் ஒருவர் மொபைலை பெற்றுக்கொண்டு, யார் இந்தப் பெண்ணை வீடியோ எடுக்கச் சொன்னது? என அனைத்து மாணவர்களின் முன் கேட்டு திட்டி உள்ளதாகவும், அதனால் மன வேதனை அடைந்து தந்தைக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பள்ளிக்கு வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று அந்த மாணவி கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 

அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், முதல் மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து கை, கால், இடுப்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து படுகாயமடைந்துள்ளார். அதைத்தொடர்ந்து, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

பெற்றோரிடம் உங்களது மகள் மயக்கமடைந்து முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த மாணவியின் பெற்றோரிடம் கேட்டபோது, அனைத்து மாணவர்களின் முன்பும் எனது மகளைத் திட்டியதால் மன வேதனை அடைந்து மேலே இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.

 

இச்சம்பவம் குறித்து லாலாப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை முயற்சியில் கீழே விழுந்தாரா அல்லது மயக்கம் அடைந்து கீழே விழுந்தாரா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்