case has been filed against YouTuber savukku Shankar in Trichy too

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி கைது செய்தனர். இதனிடையே சவுக்கு சங்கர் தேனியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது, அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் சவுக்கு சங்கர் மீது இரண்டாவதாக வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கிலும் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மீது பெண் பத்திரிகையாளர் சந்தியா புகார் அளித்துள்ளார். அதில், கோலமாவு சந்தியா என்ற பெயரில் தன்னைப் பற்றி இழிவாக கட்டுரை எழுதி, சவுக்கு சங்கர் இணையதளத்தில் வெளியிட்டார். இதன் காரணமாகஅவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கு வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அனுமதியின்றி பின்தொடர்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரி குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் கூறிய கருத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்று சேலம் பெண் உதவி ஆய்வாளர் கீதா சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், ஆபாச வார்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், இது குறித்து திருச்சியிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மற்றும்பெண் காவலர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில்,திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சவுக்கு சங்கர் மீது கோவை, தேனி, சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது திருச்சியிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.