Skip to main content

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் தொழிலதிபர்களிடம் நூதன மோசடி: ஒருவர் கைது..!

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் தொழிலதிபர்களிடம் நூதன மோசடி: ஒருவர் கைது..!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள செந்தில்நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது-39). இவர் அங்கு தனியார் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியாகும்.

இந்த நிலையில் சந்தானம், ஊட்டியில் உள்ள ஒரு மலர் என்ற தனியார் ஓட்டல் உரிமையாளரான நகார் இராஜேசிடம் கடந்த 16–ந் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு நீலகிரி மாவட்ட கலெக்டரின் உதவியாளர் பேசுவதாக பேசி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

பின்னர் அவர் கலெக்டருக்கு அவசர மருத்துவ உதவிக்காக ரூ.40 ஆயிரம் பணம் அவசரமாக தேவைப்படுகிறது என்று கூறியதை தொடர்ந்து, நகார் இராஜேஷ், சந்தானம் கூறிய வங்கி கணக்கில் ரூ.40 ஆயிரம் பணத்தை செலுத்தினார்.

இந்த நிலையில், புதிதாக மாவட்ட ஆட்சியராக வந்துள்ள பெண் அதிகாரியான இன்னொசன்ட் மீனாவை பற்றி விசாரித்ததில், அவர் பணம் வாங்கும் நபரல்ல என்று தெரிந்துள்ளது.

இதையடுத்து, சந்தானத்திடம் ரூ.40 ஆயிரத்தை இழந்த நகார் ராஜேஷ் உள்பட நால்வர் ஊட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் இராஜேசிடம் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், மறக்கொனத்தில் பதுங்கியிருந்த சந்தானத்தை நேற்று முன்தினம்  கைது செய்துள்ளனர்.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சதுரங்க வேட்டை என்ற தமிழ் சினிமா பாணியில் சீக்கிரம் குறுக்கு வழியில் பணக்காரராக வேண்டி இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டதும், மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களிடம் கலெக்டர் பேசுவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததும், சந்தானம் மீது மேற்கண்ட 5 மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தானத்திடம் இருந்து ரூ.30 ஆயிரம் ரொக்க பணம், 10 சிம்கார்டுகள், 4 செல்போன்கள், புதுப்பட சி.டி.க்கள் மற்றும் 200–க்கும் மேற்பட்ட ஆபாச பட சி.டி.க்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஊட்டி போலீசார் சந்தானத்தின் மீது நம்பிக்கை மோசடி உள்பட நான்கு  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடன் தொடர்புடைய பிரின்ஸ் என்பவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

சேலம் நகரிலுள்ள பார்க் பிளாசா என்ற ஓட்டல் உரிமையாளர் இராமலிங்கம் என்பவரை சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் பேசுவதாக கூறி, அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் ஏமாற்றிய வழக்கும் சந்தானம் மீது உள்ளது.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்