தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 41 சதவீதம் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 29 சதவீதம் சதவீதம் அதிகம். கோவையில் 169 சதவீதம், தேனி மாவட்டத்தில் 131 சதவீதம், தஞ்சாவூரில் 21 சதவீதம், திருவாரூரில் 32 சதவீதம் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் 2 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரியில் இயல்பை விட 16 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. காரைக்காலில் 19 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூடுதலாக பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.