Skip to main content

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச வக்கில்லாதவர்கள்... கே.எஸ். அழகிரி

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்போடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதற்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி என்பது 2004 இல் தொடங்கி, 2019 வரை பயணித்து வருகிறது. இக்காலக் கட்டத்தில் நடைபெற்ற 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், தற்போது 2019 நாடாளுமன்றத் தேர்தலையும் இக்கூட்டணி இணைந்து எதிர்கொள்ள இருக்கிறது.
 

ஏறத்தாழ 15 ஆண்டுகாலத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் தேசிய, மாநில நலன் கருதி தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஒருமித்த கருத்தோடு, கொள்கை உடன்பாடோடு செயல்பட்டு வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடிகிறது. 

 

ks azhagiri


 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி நாம் அமைத்ததைப் போல கொள்கைக் கூட்டணி அல்ல. சில மாதங்களுக்கு முன்பு வரை கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களையும், ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்த கறைபடிந்த கூட்டணியாகும். திரைமறைவு பேரங்களின் அடிப்படையில் அமைந்த கூட்டணி கொள்கைக் கூட்டணியாக இருக்க முடியாது.  நமது கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு எதிராக கேள்விகளை தொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாறு அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
 

காவேரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்ததில் பா.ஜ.க. அரசு எந்தளவுக்கு வஞ்சனைப் போக்கோடு செயல்பட்டது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். கர்நாடக பா.ஜ.க.வின் நலனில் அரசியல் ஆதாயம் தேட அக்கறை காட்டிய நரேந்திர மோடி தமிழகத்தின் நலன்களை புறக்கணித்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறிய போது அதற்கு மறுதலித்து செயல்பட்ட பா.ஜ.க.வை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காவேரி பிரச்சினையில் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் நீதிமன்றத்தின் தீர்வுகள் மூலமாகவே தமிழகத்தின் நலன்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. 
 

இலங்கை தமிழர் பிரச்சனையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான்  இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ? 
 

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி தீவிரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய உயிர் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிற ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து அவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் துரோகத்தை தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
 

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பா.ஜ.க.வினர் அடிக்கடி பேசுகிறார்கள். நரேந்திர மோடியும், தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். காமராஜரின் அரசியல் வரலாற்றில் என்றைக்குமே வகுப்புவாத சக்திகளோடு உறவாடியது கிடையாது. கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அப்பழுக்கற்ற காங்கிரஸ் தலைவராகவே வாழ்ந்தார். தமிழக நலன் கருதி பெருந்தலைவர் காமராஜரும், அன்னை இந்திராவும்   1970களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை தமிழிசை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
 

1966 ஆம் ஆண்டில் தலைநகர் தில்லியில் காமராஜர் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பலின் வாரிசாக விளங்கி வருகிற பா.ஜ.க.வினர் அவரது பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள்.  ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், எட்ஜூவர் போன்றவர்கள் பெயரை உச்சரித்தால் உங்களது முகமூடி கிழித்தெறியப்படும் என்பதால் வல்லபாய் படேலுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சிலை வைக்கிறீர்கள். காமராஜர் பெயரையும், ராஜாஜி பெயரையும் குறிப்பிடுகிறீர்கள். உங்கள் தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச வக்கில்லாதவர்கள் எங்களது தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச என்ன உரிமை இருக்கிறது ?
 

எனவே, தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2004 பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறது. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியேற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் தமிழிசைகள் ஒன்று சேர்ந்தாலும் எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.