Skip to main content

"மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிர்மலா சீதாராமன்!

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி உட்பட பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள், பூஜ்ஜிய பட்ஜெட் என இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், வரியை அதிகரித்து ஒரு பைசாவைக்கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; வரி விகிதத்தில் எந்த குறைப்பையும் கொண்டுவரமுடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் சில நேரங்களில் வரி குறைக்கப்படும். சில நேரங்களில் மக்கள் அதற்காக காத்திருக்க வேண்டும். இந்தாண்டு வரியை அதிகரித்து ஒரு ரூபாயைக் கூட சம்பாதிக்க நான் முயலவில்லை. கடந்த வருடமும் அவ்வாறு செய்ய முயலவில்லை.

 

நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், தொற்றுநோய் காலத்தில், மக்கள் மீது வரி சுமையை சுமத்தக்கூடாது என பிரதமர் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார். பணவீக்கம் பற்றிய எங்கள் பார்வையில் கோல் மால் இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, சாமானியர்கள் சிரமங்களை சந்திப்பார்கள்தான். ஆனால் சமையல் எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ள உடனடியாக செயல்பட்டு இறக்குமதி வரிகளை குறைத்தோம். பணவீக்கம் நிலையான அடிப்படையில் 6 சதவீத இலக்கை தாண்டவில்லை.

 

ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். அதற்கு வெளியே உள்ள அனைத்தும் தனிநபர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்களாகும். அந்த சொத்துக்களின் பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி விதிக்கிறோம். எவையெல்லாம் கிரிப்டோ, எவையெல்லாம்  கிரிப்டோ சொத்துக்கள் என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் பற்றிய விவரம் ஆலோசனைக்கு பிறகு வெளியாகும்.

 

ஒவ்வொரு கிரிப்டோ சொத்துக்களின் பரிவர்த்தனையிலும் 1% டிடிஎஸ் விதிப்பதன் மூலம் பணத்தின்  தடத்தையும் நாங்கள் கண்காணிக்கிறோம். கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான தகவல்களுக்காக மற்ற நாடுகளுடன் வங்கிக்கணக்குகள் வாரியாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.