Skip to main content

சித்ரா ராமகிருஷ்ணாவை கைப்பாவையாக்கி பங்கு சந்தையை நிர்வகித்த இமயமலை சாமியார் யார்? - சிபிஐ வட்டாரங்கள் தகவல்!

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

chitra ramakrishna

 

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இந்தநிலையில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், பங்குச்சந்தையின் ஏற்ற - இறக்கம் குறித்த கணிப்புகள் ஆகியவற்றை சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

 

இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம், தான் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றதாக சித்ரா ராமகிருஷ்ணா விசாரணையில் தெரிவித்ததாக கூறியுள்ள செபி, தாங்கள் திரட்டிய ஆவணப்படி இமயமலை சாமியாரே தேசிய பங்கு சந்தையை நிர்வகித்து வந்ததும் , சித்ரா ராமகிருஷ்ணா சாமியாரின் கைப்பாவையாக இருந்ததும் தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்தது. மேலும் சித்ரா ராமகிருஷ்ணாவின் இந்த செயல் கற்பனைக்கு எட்டாததது எனவும், பங்குச்சந்தையின் அடிப்படை கட்டுமானத்தையே உலுக்கும் செயல் எனவும் செபி கூறியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் குழு இயக்க அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் ஆனந்த் சுப்பிரமணியன் தேசிய பங்கு சந்தையின் தலைமை மூலோபாய ஆலோசகராக  நியமிக்கப்பட்டு பின்னர், குழு இயக்க அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு அவர் தேசிய பங்கு சந்தையின் பொறுப்பிலிருந்து விலகினார். இமயமலை சாமியாரின் அறிவுரைப்படியே ஆனந்த் சுப்பிரமணியனை தேசிய பங்கு சந்தையின் தலைமை மூலோபாய ஆலோசகராக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்ததாகவும், அவருக்கு ஊதிய உயர்வு அளித்தாகவும் செபி கூறியிருந்த நிலையில், ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். 

 

இந்தநிலையில் ஆனந்த் சுப்பிரமணியன் தான்  சித்ரா ராமகிருஷ்ணா கூறிய இமயமலை சாமியார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக என்டிடிவி (NDTV) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. rigyajursama@outlook.com என்ற இ-மெயில் முகவரியை உருவாக்கி, சித்ரா ராமகிருஷ்ணாவுடன் பேசியது ஆனந்த் சுப்பிரமணியன்தான் எனவும், சித்ரா ராமகிருஷ்ணா அந்த  இ-மெயில் முகவரியிடமே தேசிய பங்கு சந்தை குறித்த இரகசிய தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் கூறியதாகவும் என்டிடிவி (NDTV) தெரிவித்துள்ளது.  
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யார் அந்த இமயமலை யோகி? - சிபிஐ விசாரணையில் வெளிப்பட்ட உண்மை

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

Chitra Ramkrishna

 

தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது, பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்டது என அவர் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குறிப்பாக, இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச்சந்தை தொடர்பான ரகசிய விஷயங்களை சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாகவும் அவரின் ஆலோசனைப்படி சில முக்கிய முடிவுகளை அவர் எடுத்ததாகவும் தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், யார் அந்த இமயமலை சாமியார் என்றும் கேள்வி எழுந்தது.

 

இந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக இமயமலை சாமியார் என்பது வெறும் கட்டுக்கதை என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்த் சுப்ரமணியத்தின் ஆலோசனையின்படியே அவர் முக்கிய முடிவுகளை எடுத்ததும் தெரியவந்துள்ளது. 

 

சிபிஐ அதிகாரிகளால் ஆனந்த் சுப்ரமணியம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையின்போது ஆனந்த் சுப்ரமணியத்திற்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ வழக்கறிஞர், இத்தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

 

Next Story

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சிபிஐ காவல்!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

 CBI arrests Chitra Ramakrishna

 

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது.

 

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது, பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்டது என அவர் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து  சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

 

இவ்வழக்கில் ஏற்கனவே கைதுசெய்யப்படலாம் என அறிந்த அவர் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தியபோது அவர் உரிய பதில்களை அளிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியது. உளவியல் வல்லுநர்கள் மூலமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் அவர் முன்னுக்குப் பின்னான பதில்களை அளித்ததாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இன்று காலை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து சித்ரா ராமகிருஷ்ணாவை விசாரிக்க அனுமதிகோரி சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 7 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.