Skip to main content

விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6 

Published on 25/08/2020 | Edited on 25/08/2020
ramesh kanna



இன்னைக்கு என் ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு வாட்ஸப்பில் சில ஃபோட்டோக்கள் வந்தது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளுக்காக நிறைய மெஸேஜ்கள் வந்தன. அந்த கள்ளமில்லா சிரிப்ப சில நாட்கள் இடைவெளிக்குப் பின் பாக்குறது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு மட்டுமில்ல, நெறய பேருக்கு அவர் உடல் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியாதான் இருக்கும். இன்னும் நெறய பேருக்கு அவரை பழையபடி பாக்கணும்னு ஒரு ஏக்கமே இருக்கும். நானும் அவர்களில் ஒருவன்.

என்ன காரணம்...? அவர் ரொம்ப வித்தியாசமானவர், தனித்துவமானவர். சினிமா உலகத்துல அவர் கண்டிப்பா தனித்துவமானவர்தான். ஏன்னா, சினிமாவில் இருந்தபோதும் சரி அரசியலுக்கு வந்தபின்னும் சரி, அவர் மக்களோட நெருக்கமா இருந்தார். அவர் அளவுக்கு ஃபேமஸான வேற எந்த ஹீரோவும் அவர் அளவுக்கு இறங்கி மக்களை சந்திக்கல, இறங்கி வேலைகள் செஞ்சதில்ல. அவரை நம்பலாம், அவரை நம்பி எதுவும் செய்யலாம், நம்புறவங்கள கைவிடமாட்டார். அந்த வகையில் அவர் உண்மையிலேயே  கேப்டன்தான்.

 

dharmachakkaram



1995-96 சமயம்... 'தர்மசக்கரம்' பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்துக்கிட்டுருந்தது. நான் அஸோசியேட்டா வேலை செய்தேன். அந்தப் படத்துல ஒரு சின்ன கதாபாத்திரமும் பண்ணியிருக்கேன். அப்போதெல்லாம் விஜயகாந்த் சார்க்கு படம் பண்ணணும்னா முதலில் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்கிட்டதான் கதை சொல்லணும். நான், என் நண்பன் விவேக் கூடப் போய் ராவுத்தர்கிட்ட கதை சொன்னேன். அவர், "சூப்பரா இருக்கேப்பா... நீ போய் பொள்ளாச்சியில விஜிகிட்ட பேசு. நான் ஃபோன்ல சொல்லிடுறேன்"னு சொன்னார். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.

தர்மசக்கரம் ஷூட்டிங்கும் அமைஞ்சதால அப்போவே விஜயகாந்த் சார்கிட்ட பேசுனேன். "கதை ராவுத்தர் கேட்டாச்சுல்ல, பிடிச்சுருச்சுன்னா ஒன்னும் கவலையில்ல பண்ணிடலாம். நீ கவலப்படாத"னு சொன்னார். சந்தோஷம் அதிகமாச்சு. எல்லாமே ஒத்து வந்தாலும் நம்ம ராசின்னு ஒன்னு இருக்கு. ராசி, அதிர்ஷ்டம் எல்லாம் நம்பாதவர்களைக் கூட சினிமா நம்ப வச்சுடும். அந்த அளவுக்கு நிலையாமை உள்ளது சினிமா. நான் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடிச்சுட்டு வருவதற்குள்ள இங்க சென்னையில கேப்டன் படம் இயக்குற வாய்ப்பையும் முடிச்சு வச்சுட்டாங்க. ஆமா, 'நானும் ரமேஷ்கண்ணாவும் சேர்ந்துதான் இந்தப் படத்தை இயக்கப் போறோம்'னு விவேக் சொல்ல, அது குழப்பமாகி அப்புறம் அந்த படம் இயக்கும் வாய்ப்பே போய்விட்டது.

 

 

 

vanathai pola



 

vanathai pola2



கோடி கோடி பேர் இந்த உலகத்தில் இருந்தாலும் நம்ம வாழ்க்கையென்பது ஒரு நூறு பேர் கூடத்தானே? சினிமாவில் இருக்கவங்களுக்கு வேணா அது ஒரு ஐநூறு பேரா இருக்கலாம். ஆனாலும் மனசுக்கு நெருக்கமானவங்க, மனமுவந்து பழகுறவங்கன்னு எடுத்துக்கிட்டா அதுக்குள்ளேதான் வரும். அந்த மாதிரி சுத்தி சுத்தி திரும்பவும் விஜயகாந்த் சார்கிட்ட வந்துட்டேன். ஆமா, விக்ரமன் சார் 'வானத்தைப் போல' படம் ஆரம்பிச்சார். அதுலயும் எனக்கு நல்ல கேரக்டர். அந்தப் படத்துல செந்தில் சார், நாங்க, எல்லாம் வச்சிருந்த கடையையும் அந்த வடையையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டாங்க. அந்த அளவு காமெடியிலும் சரி, சென்டிமென்டிலும் சரி, வானத்தைப் போல, வானத்தைப் போலதான். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம். அடுத்து, 'மரியாதை' படத்திலும் அவருடன் நடித்தேன். ஆனால், கடைசி வரை அவருக்காக நான் ரெடி பண்ணிய கதையை அவரை வைத்து இயக்க முடியவில்லை. அவரை வைத்து எடுக்க முடியலையே தவிர அந்த கதை படமாகி வெற்றியும் பெற்றது. ஆமா, 'ஆதவன்' கதைதான் அது. சூர்யா நடிச்சார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார், நான் இயக்கவில்லை. ராசி... ராசி... ஹி... ஹி...

அரசியல் வருவதற்காக, வந்த பிறகு சிலர் சில புதிய விஷயங்களை செய்வார்கள். அதற்கு முன்ன அப்படி இருந்திருப்பாங்களான்னு தெரியாது. ஆனா, விஜயகாந்த் சார்கிட்ட ஏற்கனவே இருந்த விஷயங்கள், அவர் ஏற்கனவே செய்த செயல்கள், அவரை அரசியலுக்கானவராக உருவாக்குச்சு. படங்களில் தொடர்ந்து நடித்தபொழுதே ஷூட்டிங்கில் அவர் கேரவனிலோ தனியாகவோ போய் உட்கார்ந்து நான் பார்த்ததேயில்லை. நடுநாயகமாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பார். ஷூட்டிங்குக்கு எதுவும் தேவையென்றால் உடனே ஏற்பாடு செய்வார். எல்லார்கிட்டயும் 'சாப்பிட்டாச்சா, வேற எதும் குறைவா இருக்கா'னு கேட்டு செய்வார். யார் வேணும்னாலும் அவரை அணுகலாம். அப்படித்தான் இருந்தார்.

அப்பொழுது இருந்த அந்த எளிதாக அணுகும் தன்மை, அரசியலுக்கு வந்த பின்னும் இருக்கு. இப்பவும் நான் அவரது வீட்டுக்கு நேரா போனா, உடனே உள்ள வர சொல்லி பார்ப்பார். நான் நெருங்கி பழகுன ரஜினி சார், கமல் சார்கிட்டக் கூட இது முடியாது. ஏன்னா, அவர்களுக்கு பல பிரச்சனைகள், தடைகள் இருக்கு. முன்னாடியே நேரம் கேட்டு, சந்திக்கப் போறது அவர்களுக்கு சரியா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் போகணும். அவர்கள் மேல் தவறல்ல, புகழ் பெற்றவர்கள், பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள் அப்படித்தான் பிஸியா இருப்பாங்க. ஆனால் அந்த நிலையிலும் எளிதாய் அணுக முடிந்தவராக இருப்பது கேப்டனின் குணம்.


 

 

vanaithaipola success meet



தமிழ் சினிமாவில் ஃப்லிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் என்றாலே ஒதுக்கிய காலத்தில், அவர்களை அழைத்து ஆதரித்து படம் செய்து அவர்களுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கியவர். ஆர்.கே.செல்வமணி சாருக்கெல்லாம் முதன் முதலில் நல்ல சம்பளம் வாங்கித்தந்தார்.  அவரோட தைரியமும் யாருக்கும் வராது. ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். அதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆட்சியிலேயே கலைஞருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தினார். கலைஞர் செய்வது தவறென்று நினைத்தால், அதையும் சொல்லுவார். மீடியாவை சரியாகக் கையாளவில்லைனு அவர் மேல் குற்றச்சாட்டு இருக்கு. ஆனா, கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்ட நிருபர்களைத்தான் அவர் திட்டினார். மற்றபடி அவருக்கு பத்திரிகையாளர்கள் நெருக்கம்தான்.

நடிகர் சங்க தலைவரா இருந்து அவர் செஞ்சது பெரிய வேலை. கடனை அடைத்தது, பல பிரச்சனைகளை முடித்தது என்று...அவர் இறங்கி வேலை செய்தார். அவரோட பிறந்த நாளன்னைக்கு அவரை சந்திக்கப் போவேன். அவர் பிஸியா இருக்காருன்னு நினைச்சு நாம கிளம்புனா, விடமாட்டார். 'இருங்க ரமேஷ்கண்ணா போலாம், மெதுவா'ன்னு உட்கார வச்சு நிறைய பேசுவார். ஒரு முறை, ரோட்டில் என் கார் பஞ்சராகி நின்றுகொண்டிருந்தேன். அவர் காரில் வந்தார், பிரேமலதாவும் இருந்தாங்க. என்னைப் பாத்துட்டு நிறுத்திட்டார். அவர் கூட மூணு நாலு கார் வந்தது. மக்களும் அவரை கவனிச்சுட்டாங்க. 'என்னாச்சு ரமேஷ் கண்ணா... டேய், இறங்கு என்னன்னு பாரு'னு சொல்றார். எனக்கு ஒரே பதற்றம், கூட்டம் கூடுது. "அண்ணே...நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன், நான் சரி பண்ணிட்டுப் போறேன்"னு சொல்றேன் கேக்கமாட்டேன்கிறார். கஷ்டப்பட்டு அனுப்புனேன். அவர் உயரத்துக்கு, என்னால் அவருக்கு ஆகப்போவது எதுவுமில்லை. ஆனாலும் அப்படி நடந்துகொண்டார், அவர்தான் கேப்டன்.

அவர் உடல்நலம் பெற்று வருவதாகக் கேள்விப்பட்டேன், மகிழ்ச்சி. மீண்டும் அரசியலில் முழுவீச்சில் இறங்கவேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றிகள் பெறுவார். 'அவரை இவ்வளவு புகழ்றியே... நீ ஏன் அவர் கட்சியில் சேரல'னு கேக்குறீங்களா? நான் ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன், "அண்ணே... கட்சியில சேருறேன்'னு. வேற யாரா இருந்தாலும் பிரச்சாரத்துக்காவது பயன்படுவாங்கன்னு சேர்த்திருப்பாங்க. ஆனா அவரு, "சும்மா இரு ரமேஷ்கண்ணா, நீ போய் குடும்பத்தைப் பாரு. உனக்கு இந்த பிரச்னையெல்லாம் வேணாம். இது என் வேலை, நான் பாத்துக்குறேன். உனக்கு எதுவும் தேவைன்னா மட்டும் என்கிட்டே சொல்லு" என்று சொன்னார். அவர்தான் கேப்டன்!
 

 

முந்தைய பகுதி:

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5

 

 

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.