Skip to main content

108-க்கு கூட போன்பண்ண முடியல'' -அன்புமணி அட்டாக்!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

டமாவட்ட அரசியலைத் தாண்டி தென் மாவட்ட அரசியலுக்குள் நுழையும் நோக்கத்தில் "வைகை ஆற்றைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.


தேனி மாவட்டத்தில் வைகை ஆறு உருவாகும் மேகமலையின் அடிவாரமான வாலிப்பாறையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். வைகையின் மூலஆற்று நீரை கையில் அள்ளி மோந்து பார்த்துவிட்டு, சிறிதுதூரம் அந்த ஆற்றுநீரில் நடந்தார். பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசும்போது, “""இந்த தண்ணீரில் சாக்கடை கலந்திருக்கிறது. மேகமலைப் பகுதியில் மரங்களை வெட்டியதால்தான் மழைப்பொழிவு இல்லாமல் போனதற்கு காரணம். மரக்கன்றுகளை நட வேண்டும். அப்போதுதான் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான பூமியை விட்டுச் செல்லமுடியும்''’என்றவர் மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினார்.

 

anbumani



அப்போது அவரிடம் பேசிய மக்கள், ""எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு இதுவரை செல்போனில்கூட சிரமம் இல்லாமல் பேச முடியவில்லை. 108-க்கு அவசரமாக போன் செய்யவேண்டும் என்றால்கூட 20 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வருசநாட்டுக்குத்தான் போகவேண்டும்'' என்று குமுறினார்கள். உடனே, ""உங்கள் சிரமத்தைப் போக்கும்வகையில் விரைவில் செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்கிறோம்'' என்று அன்புமணி சொன்னார்.


பின்னர் வைகை அணையை பார்வையிட்ட அவர், ""வைகை அணையில 21 அடி உயரத்துக்கு சகதி தேங்கிக் கிடக்கிறது. சகதியை அகற்ற இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. குளம் குட்டைகளையும் தூர் வாரவில்லை. இப்படி இருந்தால் நீராதாரத்தை எப்படி பாதுகாக்க முடியும்?'' என்று வினா எழுப்பினார்.


பின்னர் நிலக்கோட்டையில் தனது கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, ""ஆட்சியில் இருக்கிறவரைக்கும் கொள்ளையடித்துவிட்டுப் போகலாம் என்று செயல்படும் இந்த அரசு தொடர்ந்து பதவியில் நீடிப்பது ஆபத்து. பா.ஜ.க. ஆட்டுவிக்கிறபடி ஆடும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்குகிறது. எடப்பாடி உட்பட அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்'' என்றார்.


"வைகை ஆற்றைக் காப்போம் என்று தொடங்கியிருக்கிற இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், காவிரி ஆற்றுக்காகவும் தொடரும்' என்ற அன்புமணி, ஆகஸ்ட் 2-ஆம் தேதி மதுரையில் இருந்து விரகனூர், திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம்வரை சென்று பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
 

 

 

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.