Skip to main content

எம்.ஜி.ஆரின் தீவிர விஸ்வாசிக்கு அதிமுக அவைத்தலைவர் பதவி! தமிழ்மகன் உசேன் அரசியலில் கடந்து வந்த பாதை! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Tamilmagan Hussein's path in politics

 

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்ததையொட்டி நேற்று (01.12.2021) சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதோடு, கட்சியின் மற்ற நிர்வாகிகளும் அவரை வாழ்த்தினர்.

 

இந்நிலையில், நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனின் அரசியல் பயணம் குறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அப்போது, ‘தமிழ்மகன் உசேன் பள்ளி, கல்லூரி படிக்கும்போதே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்துவந்தார். பின்னர் குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராகவும் எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்ததும் அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார் தமிழ்மகன் உசேன்.

 

பின்னர் திமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர். மூலம் அரசுப் பேருந்தில் ஓட்டுநர் வேலை கிடைத்தது. இந்நிலையில், தமிழ்மகன் உசேன் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு 24 பயணிகளுடன் அரசுப் பேருந்தை ஓட்டிச்செல்லும் போது, ரோடுகளில் மக்கள் கூடி நிற்பதைப் பார்த்து, ஆட்டோ ஓட்டுநர்களிடம் என்ன விஷயம் எனக் கேட்டார். அப்போது எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து நீக்கிவிட்டனர் என அவர்கள் கூறியதைக் கேட்ட தமிழ்மகன் உசேன், தான் ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்தை நடுரோட்டில் பயணிகளுடன் நிறுத்திவிட்டு, ஒரு வெள்ளை பேப்பரில் ‘சர்வாதிகார ஆட்சியில் அரசு பதவி வேண்டாம்’ என்று தனது ராஜினமா கடிதத்தை நடத்துனரிடம் எழுதிக் கொடுத்தார்.

 

பின்னர் அங்கிருந்து கார் மூலம் இரவு நாகர்கோவில் வந்த தமிழ்மகன் உசேன், குமரி மாவட்டத்திலுள்ள 101 எம்.ஜி.ஆர். கிளை நிர்வாகிகளை அழைத்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவைக் கண்டித்து தமிழ்நாட்டிலே முதல் தீா்மானம் போட்டார். அதன் பிறகு இரவோடு இரவாக சென்னை சென்ற அவர், எம்.ஜி.ஆரை சந்தித்து அதிமுக தொடங்கும்வரை அவருடனே இருந்தார்.

 

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்குவதற்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியமான 11 பேரில் 4வது கையெழுத்தை தமிழ்மகன் உசேன் போட்டார். அதன்பிறகு அதிமுகவின் குமரி மாவட்ட முதல் மா.செ.வாக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், அப்போது காங்கிரஸ் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தில் பட்டித்தொட்டியெல்லாம் அதிமுகவைக் கொண்டு சென்று கிளைகள் அமைத்து எம்ஜிஆரிடம் பாராட்டையும் பெற்றார்.

 

பின்னர் எம்.ஜி.ஆர். மறைந்ததும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இணைந்தார். அதன் பிறகு ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றியதும் ஜெயலலிதாவுடன் இணைந்து அதிமுகவில் தொடர்ந்தார். பின்னர் அதிமுகவில் ஜூனியர்கள் தலைதூக்க, சீனியர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கோலோச்சிய தளவாய் சுந்தரத்தால் பெரிதும் ஓரங்கட்டப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒருகட்டத்தில் அரசியல் முகமே தெரியாத அளவுக்குத் தள்ளப்பட்டார்.

 

மேலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தும் தமிழ்மகன் உசேன் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் கேட்பதும், வட்டிக்குப் பணம் வாங்கியதும், இதனால் அவர் வசித்த வீடு வங்கி ஏலத்திற்குப் போகும் நிலை வந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் கோலோச்சிய அவர், ஜெயலலிதா காலத்தில் கண்ணீா் வடித்ததைப் பத்திரிகை செய்திகளில் பார்த்த ஜெயலலிதா, தமிழ்மகன் உசேனுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பதவி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவி என கொடுத்து அவரை ஆறுதல்படுத்தியதோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒன்றையும் வழங்கினார்.

 

தன்னுடைய 68 வருட அரசியல் வாழ்க்கையில் இன்று அதிமுகவின் அவைத்தலைவராக, அதுவும் தற்காலிக தலைவராகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என தமிழ்மகன் உசேன் குறித்து நினைவுகூர்ந்தனர்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.