Skip to main content

எம்.எல்.ஏ.க்களை வளைத்த ஈ.பி.எஸ்.!!! -அடுத்து என்ன நடக்குமோ? என மூத்த நிர்வாகிகள் டென்ஷன்!!!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020
admk

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறுகையில், அக்டோபர் 7-ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

 

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். செயற்குழுக் கூட்டம் நடந்த மறுநாள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அடுத்தநாள் நடந்த அரசு விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. இது அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

 

முதலமைச்சர் வேட்பாளர் 7ஆம் தேதிதான் அறிவிக்கப்படும் என்று கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுத்து அதிமுக ஆட்சிதான், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்றார். இதனால் அதிமுகவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இந்த நிலையில் திடீரென 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கட்சி  எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த பிறகு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

இதனிடையே தங்களுக்கு ஆதரவான எம்எல்ஏக்களுக்கு தலா 50எல் நேற்று இரவு எடப்பாடி தரப்பு விநியோகம் செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அதிமுக தலைமை நிர்வாகி ஒருவருக்கு தெரியாமலேயே அம்மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் கவனித்துவிட்டார்களாம்.

 

இதனை அறிந்த அந்த தலைமை நிர்வாகி, ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரும் ஒற்றுமையாக இருக்க நாம் பேசி வருகிறோம். நமக்கே தெரியாமல் இந்த விஷயம் நடந்திருக்கிறதா? என கடும் டென்ஷனில் இருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமியே ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் நேரடியாக பேசுவதால் அந்தந்த பகுதி மூத்த நிர்வாகிகள் அடுத்து என்ன நடக்குமோ? என டென்ஷனில் இருக்கிறார்கள் என்கின்றனர் ர.ர.க்கள்...

 

-மகேஷ்

 

 

 

 

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.