Skip to main content

கேள்விநேரம் ஸ்வாஹா! கிழித்து தொங்கவிடும் எதிர்க்கட்சிகள்! கிடுகிடு வேகத்தில் பா.ஜ.க.!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
dddd

 

 

இந்தியாவில் கரோனாவின் பரவலையடுத்து மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மழைக்காலக் கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது. கரோனா முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கரோனா தொற்றுள்ள 30 எம்.பி.க்கள் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

மாஸ்க் அணிதல், ஒரு இருக்கை விட்டுவிட்டு உறுப்பினர்களை அமரவைத்தல், கண்ணாடித் தடுப்பு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டத் தொடரில் கடைப்பிடிக்கப்பட்டன. அதேபோல எம்.பி.க்களின் வருகையும் பிரத்யேக ஆப் மூலம் பதிவுசெய்யப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி, நீட் விவகாரம், கேள்வி நேரம் தவிர்க்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போட்டன.

 

நீட் அட்டாக்

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையால் 12 மாணவர்கள் இறந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் எனப் பேசினார். திருச்சி சிவாவோ, பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு மட்டும் எப்படி நடத்த முடியும். பணம்கொடுத்து படிப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

 

கேள்விநேரம் ஸ்வாஹா

கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, மக்களின் பிரச்சனைகளை எழுப்புவதற்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு கேள்வி நேரம். அதனை ரத்துசெய்வதன் மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க அரசு முயற்சிக்கிறது என்றார். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து கேள்வி நேரம் ரத்துசெய்யப்படவில்லையெனவும், கேள்விகளை எழுதி தந்தால் பொருத்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என அமைச்சர் பிரகலாத் விளக்கமளித்தார்.

 

எல்லையைக் கோட்டைவிடும் இந்தியா

பல மாதங்களாக இந்திய எல்லைப்பகுதி பத்திரமாக இருக்கிறது எனக் கூறிவந்தது பா.ஜ.க. மாறாக, எல்லையில் சீனா படையைக் குவித்துவருவதாகவும், ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாதெனவும் மக்களவையிலேயே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். 1100 கிலோமீட்டர் ஆக்கிரமிப்பு பற்றி விவாதம் நடத்தவேண்டுமென எதிர்க்கட்சிகள் கூற, பா.ஜ. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் நீங்கள் பேசலாம் எனக் கூறினார்..

 

செத்துப் போனாங்களா...

கரோனா குறித்த புள்ளி விவரங்களைப் பகிர்ந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இதுவரை கிட்டத்தட்ட 36 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இது நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 77.65 சதவிகிதமாகும். அரசின் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக 38,000 பேர் உயிரிழப்பது தவிர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் கரோனா சாதனைகளைத் தெரிவித்தார்.

 

இதையடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களுக்கு அரசு என்னென்ன உதவிகளை வழங்கியதென கேள்வியெழுப்பப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், "ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்ற புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை. எனவே நிவாரணம் குறித்த கேள்விக்கு இடமில்லை'' என பதிலளித்தார்.

 

யார் நலனுக்காக மசோதா?

சந்தைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில் மாநில அரசுகளைச் கலந்தாலோசிக்காமல், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அவசரமாக மூன்று மசோதாக்களை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங்கள் கிளம்பின. விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாடு, விவசாய விளைபொருள்களுக்கான விலை உறுதிப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் குறித்த இந்த அவசர சட்டத்திருத்தங்களுக்கு இடதுசாரி, காங்கிரஸ், திரிணமுல் காங்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளின் பேரைச் சொல்லி பெருநிறுவனங்கள் பலனடையவே அவசரச் சட்டங்களை ஆளுங்கட்சி கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

 

கடன் நல்லது

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக்சிங் தாக்குர், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் போதிய நிதியில்லை. மாநிலங்கள் கடன் வாங்கிச் சமாளிக்கும்படி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

 

வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டத்துக்கெதிராக விமர்சனம் வைக்கும்போது, நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகக்கூறி திரிணமுல் காங்கிரஸின் சௌகதாராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென பாராளுமன்ற அலுவல் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.

 

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு செக்

கரோனா சூழலால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் நிதிநெருக்கடியைச் சமாளிக்க எம்.பி.க்கள் ஊதியத்தை 30 சதவீதம் குறைக்க முடிவெடுத்ததுடன், இரண்டாண்டுகளுக்கான எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் மத்திய அரசு கைவத்துள்ளது.

 

மொத்தத்தில் நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே சரமாரியாக விமர்சனங்களை வைக்கும் எதிர்க்கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அவசர சட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம்காட்டுகிறது பா.ஜ.க.

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.