Skip to main content

சேலம் ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரியில் திறந்துவிட எதிர்ப்பு! 'விவசாயம் அடியோடு பாதிக்கும் அபாயம்!'

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

சேலம் ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரியில் திறந்துவிடவும் கிராம மக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏரியில் தேக்குவதால் விவசாயம் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.


சேலத்தை அடுத்துள்ள தளவாய்ப்பட்டியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக 4.50 லட்சம் லிட்டர் முதல் 5 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்து வருகிறது. தவிர, பால் பவுடர், ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய், நறுமணப்பால் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்களும் தயாரிக்கப்படுகிறது. 

salem district aavin milk company water drop at lake


ஆவினில் பயன்படுத்தப்பட்ட நீர், அதன்பிறகு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீர், பால் பண்ணையில் திறந்தவெளியில் இரண்டு குட்டைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் என்றாலும், இதுபோன்ற ஆவினுக்கு தேவைப்படாத தண்ணீர் மட்டுமே தினமும் 5 லட்சம் லிட்டர் வரை சேகரமாகிறது. இந்த தண்ணீர் பால் பண்ணை நிலத்தில் நீண்ட காலமாக தேக்கி வைக்கப்படுவதால், ரொட்டிக்காரவட்டம், சித்தனூர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நீரும் மாசடைந்துள்ளது.


பால் பண்ணை கழிவுநீரால் சண்முகம், குப்புசாமி, ரதி, சந்திரன் உள்ளிட்ட 15 பேரின் வீடுகளுக்குள் தரை தளத்தை பிளந்து கொண்டு 'குபுகுபு'வென்று ஊற்றெடுத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குமார் மற்றும் அவருடைய சகோதரர்கள் ரொட்டிக்காரவட்டத்தில் இருந்து கோயில் மரம் என்ற இடத்திற்கு இடம்மாறிச் சென்றுவிட்டனர். எந்த நேரமும் சுவர்கள் நீரில் ஊறிக்கொண்டே இருந்ததால் இரண்டு பேரின் பேக்கரி தயாரிப்புக்கூடங்கள் இடிந்து விழுந்து விட்டன.


இது ஒருபுறம் இருக்க, அக். 21ம் தேதி இரவு முதல் காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால், ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவுநீர், பூமிக்கடியிலேயே ஒரு கி.மீ. தூரத்திற்கு பாய்ந்தோடி வருகிறது. இந்த தண்ணீர், சித்தனூர், ரொட்டிக்காரவட்டத்தில் தங்கராஜ், நாராயணன், மாரியம்மாள் ஆகியோருக்குச் சொந்தமான வயல்களை மூழ்கடித்துள்ளன. 

salem district aavin milk company water drop at lake


இதனால், ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்றுகூறி, கடந்த ஒரு வாரமாக தளவாய்ப்பட்டி, சித்தனூர், ரொட்டிக்காரவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் போராடி வருகின்றனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். மக்களிடமும் கருத்து கேட்டனர். அதையடுத்து, பால் பண்ணையில் கிழக்குபுறத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மேற்கு புறத்தில் கால்நடை தீவனம் பயிரிடப்பட்டுள்ள பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. ஆனாலும், அந்த தண்ணீர் சுற்றுச்சுவரை துளைத்துக்கொண்டு வெளியேறியது. 

salem district aavin milk company water drop at lake



அதன்பிறகு, அக். 23ம் தேதி காலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் ஆவின் பொது மேலாளரை நேரில் சந்தித்து தங்கள் பிரச்னைகளைக் கூறினர். தற்காலிக தீர்வாக, ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரிக்குள் கொண்டு செல்லலாம் என்ற யோசனையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், மாலையில் விவசாயிகளை அமைப்பைச் சேர்ந்த மாதேஸ்வரன், திருவேங்கடம் ஆகியோர், தளவாய்ப்பட்டி ஏரிக்குள் ஆவின் கழிவு நீரை கொண்டு வந்தால் ஏரிக்குக் கீழ் பகுதியில் விவசாயம் அடியோடு பாதிக்கும் என்ற பிரச்னையை முன்வைத்தனர்.


இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ''தளவாய்ப்பட்டி ஏரி இன்னும் முழுமையாக தூர்வாரப்படவில்லை. ஆழமும் குறைவாக உள்ள இந்த ஏரியில் கனமழை வந்து, அந்த தண்ணீர் தேங்கினாலே கரைக்கு மேலே வந்துவிடும் அபாயம் இருக்கிறது. அத்துடன் ஆவின் கழிவு நீரும் சேர்ந்தால் நிச்சயமாக கரையைக் கடந்து விவசாய நிலத்திற்குள் புகுந்து விடும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.

salem district aavin milk company water drop at lake


இதனால் ஏரிக்கு கீழ்ப்புறத்தில் இருந்து கஞ்சமலை வரை கரும்பு, நெல், கடலை விவசாயம் செய்து வரும் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், இந்த ஏரியில் தண்ணீர் ஓடிச்செல்லும் வகையில் இல்லாமல் தேங்கியே கிடக்கிறது. அப்படியான நிலையில் ஆவின் கழிவுநீரையும் கொண்டு வந்து தேக்கி வைப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல,'' என்றனர். 


அக். 23ம் தேதி மாலையில் நாமும் (நக்கீரன்) தளவாய்ப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டோம். ஏரிக்கரை பலமின்றி இருந்தது. இந்த ஏரியின் கழுங்கு பகுதியில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் வழியாக ஆவின் தண்ணீரை கொண்டு சென்றாலும் அப்பகுதி மக்களும் எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது.


இதற்கிடையே, இரவு 7 மணியளவில் ஆவின் மேலாளர் மெய்யழகன் (சிவில்) தலைமையில் ஊழியர்கள் சிலர், பொக்லின் இயந்திரங்களுடன் தளவாய்ப்பட்டி அரசு துவக்கப்பள்ளிக்கு எதிரில் ஆவின் சுற்றுச்சுவரை துளையிட்டு, அதில் பிவிசி குழாய் பொருத்தி, அதன்மூலம் பண்ணையில் இருந்து கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்து விடுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த விவசாய அமைப்பைச் சேர்ந்த திருவேங்கடம், மாதேஸ்வரன் மற்றும் ஊர் மக்கள் சார்பில் சிவராமன், தோழர் சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்விடத்தில் கூடினர். அவர்கள் உடனடியாக பணிகளை நிறுத்தும்படி கூறினர். எக்காரணம் கொண்டும் ஏரிக்குள் ஆவின் தண்ணீரை விடக்கூடாது என்றனர். இதையடுத்து ஆவின் ஊழியர்கள் அப்பணிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

salem district aavin milk company water drop at lake


அதையடுத்து, உடனடியாக தளவாய்ப்பட்டி சமுதாயக்கூடத்தில் ஊர் மக்கள் கூடி பேசினர். அதில், ஆவின் நிறுவன கழிவு நீரை, நிரந்தர மற்றும் நீண்டகாலத் தீர்வாக திருமணிமுத்தாற்றில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு ரொட்டிக்காரவட்டம், சித்தனூரைச் சேர்ந்த தங்கராஜ், நாராயணன் உள்ளிட்டோரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக ஆவின் பொது மேலாளரை சந்தித்துப் பேசவும் முடிவெடுத்துள்ளனர்.


தளவாய்ப்பட்டி மக்களின் நாற்பதாண்டு கால பிரச்னையை ஆவின் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கருதி சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.





 

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.