மோடியின் குணமே இதுதான் !!! - வானதி ஸ்ரீநிவாசன்
மத்திய பாஜக அரசை, ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்... திமுக சம்மந்தப்பட்டுள்ள 2ஜி வழக்கின் தீர்ப்புத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது... அதிமுக அரசை மத்திய அரசு தான் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்குகிறது என்ற பேச்சும் இருக்கிறது... இந்நிலையில், 'தினத்தந்தி' பவள விழாவுக்காக இன்று (06-11-2017) சென்னை வந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் சென்று கலைஞரை சந்தித்திருக்கிறார். அரசியல் நாகரிகம் மட்டும்தானா, அதற்கு மேலும் அர்த்தமுள்ளதா என்றறிய பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்...
இன்றைய சந்திப்பு பற்றி... ?
தொடர்ந்து கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், ஒரு மூத்த அரசியல்வாதியின் உடல்நலத்தை விசாரிக்க இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வேறு அரசியல் காரணங்கள் இல்லை...
இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்படாமல் திடீரென நிகழ்ந்ததே?
இப்பொழுது தானே கலைஞர் பிறரை சந்திக்கும் நிலையில் இருக்கிறார்? ஸ்டாலின் அடிக்கடி, "பிரதமர் எங்களை சந்திப்பதில்லை, சந்திப்பதில்லை" என்று கூறினாலும் கூட, ஒரு மூத்த அரசியல்வாதியின் உடல்நிலை சரியில்லாத பொழுது அவரை சந்திக்க வேண்டுமென்ற முறைக்காக சென்னை வந்திருக்கும்பொழுது, அவரை சென்று சந்தித்திருக்கிறார் மோடி.
இந்த சந்திப்பில் அரசியல் நோக்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறதே?
எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கும் தமிழக அரசியல் சூழ்நிலையில், அரசியல் உள்நோக்கம் அவரவர் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. பிரதமரின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், குஜராத்தில் கேசுபாய் பட்டேல் எங்களது கட்சியை விட்டு வெளியே சென்று விட்டால் கூட, அவரது மகன் இறந்த பொழுது, பிரதமர் சென்று விசாரித்தார். மோடியின் குணமே இதுதான். தனிமனித உறவை மதிப்பவர் மாற்றுக் கட்சி அரசியல்வாதிகளுடனும் உறவு பாராட்டுபவர்.
-வே.ராஜவேல்