வனத்துறை அனுமதி பெறாமல் யானைத் தந்தங்கள் வைத் திருப்பது இந்திய வனப்பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும்.
தமிழ்நாட்டில் ராஜபாளையம் - சேத்தூர் அருகே தென்காசி சாலையில், ரூ.60 லட்சம் மதிப்பிலான 2 யானைத் தந்தங்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தபோது, முன்னாள் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அனந்தப்பனின் மகன் ராம்அழகு பிடிபட்டார். காவல்துறையினர் ராம்அழகுவை வனத்துறையினரிடம் ஒப்படைத்ததும் நடந்த விசாரணையில், அந்த தந்தங்களை முன்னாள் தி.மு.க. எம்.பி. தனுஷ்குமாரின் டிரைவர் செல்லையா விடமிருந்து வாங்கியதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து ராஜபாளையம் வனச்சரக அலுவலர் பூவேந்தனைத் தொடர்புகொண்டோம்..
"போலீஸ் மாதிரி வனத்துறைல எப்.ஐ.ஆர். போடமாட்டோம். மொதல்ல ரிமான்ட் பண்ணிருவோம். விசாரணை எல்லாம் முடிஞ்ச பிறகு, பின்னால ஏ ஃபார்ம் சப்மிட் பண்ணுவோம். ராம் அழகு வாக்குமூலம் கொடுத் திருக்கான். அவனும் இன்னொருத்தனும் சம்பந்தப்பட்டி ருப்பதா சொல்லிருக்கான். ராம் அழகு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படைல அவனையும் செல்லையாவை யும் ரிமான்ட் பண்ணிருக்கோம். யானைத் தந்தம் எப்படி வந்துச்சுன்னு அந்த வீட்ல இருக்கவங்கள விசாரிக்கச் சொல்லிருக்கோம். அந்த வீட்ல உள்ளவங்க என்ன சொல்லுறாங்கங்கிறத வச்சித்தான் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பதுங்கிற முடிவு பண்ணமுடியும்.
ஜமீன் பரம்பரை மாதிரி உள்ளவங்க பழைய யானைத்தந்தம் வச்சிருந்தாங்கன்னா, அதற்கான சான்றும் ஆதாரமும் வச்சிருப்பாங்க. அது இருந்தால், அவங்க தலைமுறை தலைமுறையா வச்சிருக்காங்க. இப்ப எதுவும் வேட்டையாடலன்னு ரிப்போர்ட் கொடுப்போம். இந்த செல்லையா நெறய திருட்டு வேலை பண்ணிருக்கான். அவங்க (முன்னாள் தி.மு.க. எம்.பி. தனுஷ்குமாரின் தந்தை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தனுஷ்கோடி) வீட்லயே தங்கி, குத்துவிளக்கு எல்லாம் எடுத்து வித்திருக்கானாம். மோட்டாரை கழற்றி விற்றதாவும், சி.சி.டி.வி. வயரை கட் பண்ணிட்டதாவும், அவங்க தரப்புல சொல்லுறாங்க. இவங்கள எல்லாம் நேர்ல கூப்பிட்டு விசாரிக்கணும். இந்த விசாரணைய முடிச்சிட்டு, செல்லையா தந்தங்களைத் திருடியதா சொல்லுற வீட்டை இப்ப யாரு பயன்படுத்துறாங்கன்னு பார்க்கணும். அந்த மொத்த வளாகத்துக்கும் யாரு உரிமை யாளர்ங்கிறத விசாரிக்கணும். அப்புறம், யானைத்தந்தம் செல்லையா கைக்கு எப்படி வந்துச்சுன்னு கேட்கணும். நேற்றுதான் ரிமான்ட் பண்ணிருக்கோம். அடுத்த கட்டம் என்னங்கிறத எல்லா விசாரணையும் முடிஞ்சபிறகுதான் சொல்லமுடியும்''’என்றார்.
‘பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் முன்னாள் எம்.பி. தனுஷ்குமார் வீட்டில் இருந்ததுதான். தனுஷ்குமாரும் அவருடைய தந்தை முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடியும் டிரைவர் செல்லையாவைப் பலிகடாவாக்கி, காலப்போக்கில் வழக்கிலிருந்து காப்பாற்றிவிடுவார்கள்’ என்று கூறப்படும் நிலையில், தென்காசி தி.மு.க. முன்னாள் எம்.பி. தனுஷ்குமாரிடம் பேசினோம்.
"நான் எம்.பி. ஆகுறதுக்கு முன்னால செல்லையா என்கிட்ட டிரைவரா வேலை பார்த் தான். அவனுடைய நடவடிக்கை சரியில் லைன்னு நான் வெளியே அனுப்பிட்டேன். ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி, பொண்டாட்டி பிள்ளை யோடு வந்து, எங்க அம்மாகிட்ட அழுதிருப்பான் போல. அம்மா தேவ தானத்துல இருக்காங்க. நான் ராஜ பாளையத்துக்கு வந்து 18 வருஷமாச்சு. செல்லையா தேவதானம் தோட்டத்துல டிராக்டர் ஓட்டிட்டு இருந்திருப்பான் போல. கடைசி ரெண்டு மூணு மாசத்துல வீட்டுல நெறய பொருள் காணாமப் போயிருக்கு. வீட்ல இருந்த குத்து விளக்கு, தோட்டத்துல இருந்த கேட் எல்லாம் காணாமப் போயிருக்கு. சி.சி.டி.வி. வயரையும் கட் பண்ணிருக்காங்க. எங்க அண்ணன் ராஜேந்திரன் ஹைதராபாத்ல இருக்கான். அவன்தான் தேவ தானம் வீட்ல இருக்கான். இத எல்லாம் தெரிஞ்சி, அப்பாகிட்ட சொல்லி, சத்தம் போட்டிருக்காங்க. செல்லையாவை அப்பா வீட்டைவிட்டு போகச் சொல்லிட்டாங்க போல. நேத்தோ, முந்தாநாளோ, ஏதோ பொருளோட போயி மாட்டிக்கிட்டான் போல. அப்ப எம்.பி.யோட டிரைவர்னு சொல்லிருக்கான். போலீஸ் விசாரிச்சி, இப்ப அவன் என்கிட்ட டிரைவரா இல்லைன்னு தெரிஞ்சி கிட்டாங்க. செல்லையா கொடுத்த ஸ்டேட் மென்ட்ல ராஜேந்திரன் வீட்லதான் யானைத் தந்தங்களை எடுத்தேன்னு சொல்லிருக்கான். அது எங்க அண்ணன் வீடு. எம்.பி.யோட அண்ணன்னு சொன்னதுனால, செல்லையா என் டிரைவர்ன்னு தகவல் பரவிருச்சு. வனத்துறை டி.எப்.ஓ.கிட்ட, நீங்க தாராளமா போங்க. செல்லையா எங்கே சொல்லுறானோ, அங்கே போங்க. அவன் சொல்லுற இடத்துல தாராளமா செக் பண்ணிட்டு, அவங்க கிட்ட ஸ்டேட்மென்ட் வேணும்னா வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டேன். நேத்து எங்க அண்ணன் வீட்ல சோதனை நடத்திருப்பாங்க போல. தேடிப் பார்த்துட்டு, தந்தம் மாதிரி பொருளோ, அது இருந்ததுக்கான தடயமோ இல்லைன்னு எழுதிக் கொடுத்ததா சொல்லுறாங்க''”என்று விளக்கம் தந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, கொச்சியில் உள்ள கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில் நான்கு யானைத் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மத்திய அரசின் உத்தரவுப்படி, கேரள அரசாங்கத்தின் உரிமைச் சான்றிதழ் இருந்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக, கடந்த 13 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திவருகிறார் மோகன்லால்.
இந்நிலையில், சட்ட விரோதமாக யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக, முன்னாள் தி.மு.க. எம்.பி. தனுஷ்குமார் மற்றும் குடும்பத்தார் குறித்து குற்றச்சாட்டு எழுவதும், தந்தம் கடத்திய வழக்கில் கைதானவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆளும் கட்சிக்கு நெருடலை ஏற்படுத்துவதாக உள்ளது.