Skip to main content

"முகிலனை நாயை விட்டு கடிக்க வைத்துள்ளார்கள்" பகீர் கிளப்பும் மன்சூர் அலிகான்!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த சமூக ஆர்வலர் முகிலன் 140 நாட்களுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் காணாமல் போனதில் இருந்து அவருக்காக தொடர்ந்து குரல்கொடுத்து கொண்டிருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். முகிலன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அவரிடம் கேள்வியை முன்வைத்தோம். இதோ அவரின் அனல் கக்கும் பதில்கள்...     


முகிலன் 140 நாட்களுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் காணாமல் போனபோது அவருக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தீங்க. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?   

 

நேற்று காலையில் ஒரு ரெண்டு, மூன்று மணிக்குதான் நக்கீரனில் அந்த வீடியோவை பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனை இழுத்துட்டு போற மாதிரி அவரை போலீஸ் இழுத்துட்டு போறாங்க. அவரை சித்தரவதை பண்ணியிருக்காங்க. என்ன செஞ்சாங்கன்னு தெரியலை. ஆனா அணு அளவும் அந்த உத்வேகம் குறையாம, கூடங்குளத்தில் அணுக்கழிவை கொட்டக்கூடாது, ஏழு தமிழர்களை விடுதலை செய்யனும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்லிக்கிட்டே போனார். அதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம் பார்த்தால், அவரை நாயை விட்டு கடிக்க வச்சி இருக்காங்க. 200, 300 பிச்சை காச வாங்கிட்டு ஓட்டு போட்டால் இதான் நடக்கும். ரொம்ப வேதனையா இருக்கு.

 

mansoor speak about mugilan issue

 

 

ஒரு பெண் கொடுத்த பாலியல் வழக்கி்ல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மனைவி இந்த குற்றச்சாட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இதை நீங்க எப்படி பாக்குறீங்க?

 

இந்த நாட்டுக்காக, மண்ணுக்காக, கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள் ஊனமா பிறக்கக் கூடாது, காற்று மாசுபடுது, தண்ணீரை உறிஞ்சுறாங்கன்னு சொல்லி அதை எதிர்த்து போறாடுற ஆளு அவரு. அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சி. அப்புறம் அவர் யார் கூட வாழ போறாரு. என்ன பாலியல் பலாத்காரம், வெங்காய பலாத்காரம். அவரு என்ன ஆயிரம் கோடி பணத்தை வச்சிக்கிட்டு ஆடி காருல வந்துகிட்டு இருக்காரா?  காவல்துறைக்கு மனசாட்சி இல்ல, எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் என்ன பண்ணிகிட்டு இருக்காங்க. ஆனாவூனா பாலியல் பலாத்காரம்.  நாட்டு மக்கள் பாத்துக்கிட்டுதான் இருக்காங்க, தமிழ்நாடு ஒட்டுமொத்தமா கொதிச்சி போய் கிடக்குது. சினிமாவில் மட்டும் தான் நாங்க ஏழை பாழைகள் பக்கம் இருப்போம்னு நினைக்காதீங்க. ஒட்டுமொத்த சினிமா, ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டத்துல குதிக்கும். இந்த அநியாயத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வையுங்க. அவ்வளவுதான் உங்களை எச்சரித்து கொள்கிறேன். என்ன பாலியல் பலாத்காரம், அந்தம்மா பேரை பத்திரிகையில போட்டு இருக்காங்களா? நாட்டுல எல்லா மந்திரியும் ஏமாத்திகிட்டு சுத்திகிட்டு இருக்கான், மினிஸ்டர் எல்லாம் ரேப் பண்ணிட்டு, கொள்ளையடிச்சிட்டு இருக்கான். மொள்ளமாறித்தனம் பன்னி, ஓட்டு மிஷின்ல மோசடி செய்து ஆட்சியில     உட்கார்ந்துகிட்டு இருக்காங்க. அவுங்க காலை நக்கிட்டு ஒரு கூட்டம் சுத்திகிட்டு இருக்கு. வெக்கம், மானம், சூடு, சுரணை எதுவுமே இல்லையா?  வழக்கு போடுறானுங்களாம், வெங்காயம். மனசாட்சி இருக்கா இல்லையா. 13 பேரை சுட்டு கொன்னவங்க மீது வழக்கு போடு. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க எங்க மண்ணுதான் கிடைக்குதா? தொலைத்து விடுவோம். அமைதியா இருக்கோம்னு பாக்காதீங்க.

 

நீட் தேர்வை ஆதரித்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறாரே?

 

விஜயகாந்த் நீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டாரா? எப்ப சொன்னாரு? அவரு சொன்னாரா இல்ல பிரேம லதா சொன்னாங்களா, அவரு மச்சான் சுதீஷ் சொன்னாரா, அவரை வெளியில் வந்து நாலு வார்த்தை பேச சொல்லுங்க, நான் நம்புறேன். வாங்குன காசுக்கு கூவ வேணாம். ஜெயிக்கத்தான் முடியில அதான் இப்படி பன்றாங்க.

 

நீட் தேர்வை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்னு அறிக்கையில் கூறி இருக்காங்களே?

 

என்ன அரசியல் ஆக்க வேணாமா? இது அரசியல் இல்லாம இது என்னய்யா வெங்காயம், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை செருப்பால் அடித்து விரட்டுவோம். நீங்க ஒழுங்கா பேலட் பேப்பரில் தேர்தலை நடத்துங்க. அப்புறம் பார்ப்போம், யாரு ஜெயிக்குறாங்கன்னு. ஏ.பி,சி,டி தெரியலை அவங்க எல்லாம் நார்த்துல டீச்சரா இருக்காங்கன்னு வாட்ஸ் அப்பில் வீடியோ வெளிவருது. நீங்க எங்க பசங்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுக்கிறீங்களா? வெக்கமா இல்லை... முகிலனை முதல்ல வெளியில் கொண்டுவரச் சொல்லுங்க, பெரியார், பெரியார்னு அவர் படத்த போட்டுக்கிட்டு ஊரை ஏமாத்திகிட்டு இருக்கானுங்க. இலங்கையில நூற்றுக்கணக்கான பெண்களை ராணுவம் வன்புணர்வு செஞ்சாங்களே, அதை கேட்க துப்பில்லாத அரசாங்கம், மக்களுக்காக போராடுறவங்க மேல பாலியல் வழக்கு போடுறாங்க, இதுதான் ஒரு அரசாங்கத்தோட வேலையா? இதை நாங்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.


 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.