Skip to main content

அடாவடி காவல்துறையினருக்கு வெளிப்படையாகவே ஆதரவு... லிஸ்ட்டில் தப்பிய ஐ.பி.எஸ்.கள்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020
police

                                                    சத்தியமூர்த்தி, அபினங், திரிபாதி

 

மூச்சுத்திணறலாலும், நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும், மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலை குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், "உள்துறை கொடுத்ததைத்தானே நான் சொன்னேன்' என வருத்தப்பட்டிருக்கிறார் முதல்வர்.

 

சாத்தான்குளம் சம்பவம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுக்கு எதிரான விமர்சனங்களை கொண்டு வருவதால், காவல்துறையில் பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என முதல்வருக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய உளவுத்துறையின் முன்னாள் ஐ.ஜி. சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்கு முதல்வர், முதலில் அங்கு என்ன நடந்தது என அறிக்கை தருமாறு சத்தியமூர்த்தி மூலம் காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டார். காவல்துறை ஒரு அறிக்கையை முதல்வருக்கு கொடுத்தது.

 

அதில், சம்பவம் நடப்பதற்கு முதல் நாள், பென்னிக்ஸ் செல்போன் கடையை மூடாமல் வைத்திருந்தார். அங்கு சென்ற காவல்துறையினர் கடையை மூடும்படி சத்தம் போட்டார்கள். அவர்கள் சென்ற பிறகு காவல்துறையினரை பற்றி பென்னிக்ஸ் கேவலமாக திட்டியுள்ளார். அந்த முன் விரோதத்தினால் ஜெயராஜை அழைத்துச் சென்ற போலீசார், அவரை ஜட்டியுடன் லாக்கப்பில் வைத்து அடித்துள்ளனர். இதைப் பார்த்த பென்னிக்ஸ் காவல்துறையினருடன் தகராறு செய்துள்ளார், அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதனால் பென்னிக்ஸ்ஸையும் அடிக்கச் சொல்லி ஆய்வாளர் உத்தரவிட இரவு முழுவதும் அடித்துள்ளனர். அதன்பிறகு நீதிபதியிடம் ஆஜர்படுத்திவிட்டு பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறை நிரம்பி வழிகிறது என இவர்களை சேர்க்க மறுக்கவே கோவில்பட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

 

போலீசார் மிருகத்தனமாக தாக்கியதில் பென்னிக்ஸ்தான் அதிகம் பாதிக்கப்பட்டார். அவருக்கு மலம் கழிப்பதில் கோளாறு ஏற்பட்டு, சிரமப்பட்டார். அதன்பிறகு கோவில்பட்டி மருத்துவமனைக்கு சிறையில் இருந்து கொண்டு சென்றபோது, பென்னிக்ஸ் முதலில் இறந்துவிட, அந்த அதிர்ச்சியில் அவரது தந்தை ஜெயராஜ் இறந்துவிட்டார் என ரிப்போர்ட் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி பதற்றமானார்.

 

 

police

 

காவல்துறையில் மாற்றங்கள் உடனே செய்ய வேண்டும் என டி.ஜி.பி.யும், ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் முதல்வரும் ஆலோசனை செய்தனர். அதன்படி முதலில் தூத்துக்குடி எஸ்.பி.யான அருண்பாலகோபாலனை மாற்றி, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரை கொண்டு வந்தனர். அதன்பிறகு சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெற்றதால் அந்த பதவிக்கு தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டார்.

 

இந்த மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை அவமரியாதை செய்ததாக அவர் கொடுத்த புகாரின்படி, தூத்துக்குடி ஏ.எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. மற்றும் ஒரு காவலர் மாற்றப்பட்டனர், இந்த சம்பவம் பேரலையாக எழுந்தது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் வெளிப்படையாக, ஒரு மாஜிஸ்திரேட்டை காவல்துறையினர் அவமானப்படுத்தியதை கண்டித்தனர். அப்போதுதான், ஒட்டுமொத்தமாக காவல்துறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டிருந்ததை உடனடியாக செய்ய வேண்டும் என பழனிசாமி முடிவு செய்தார்.

 

யாரையெல்லாம் மாற்ற வேண்டும் என டி.ஜி.பி. திரிபாதியிடமும், சத்தியமூர்த்தியிடமும் லிஸ்ட் கேட்டார். அதன்படி சென்னை மாநகர கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் ஆசிர்வாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி, திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் கண்ணன் ஆகியோர் உள்பட 37 அதிகாரிகளுக்கு மாறுதல் தருவதற்கு ஒரு லிஸ்டை கொடுத்தனர்.

 

சென்னை நகர கமிஷனராக மகேஷ்குமார் அகர்வாலை நியமிக்கலாம் என டிஜிபி திரிபாதி பரிந்துரை செய்தார். அதேபோல் மதுரை நகர கமிஷனராக பிரேமானந்த் சின்ஹாவை நியமிக்கலாம் என டி.ஜி.பி. பரிந்துரை செய்தார். சென்னை நகர கமிஷனராக இருந்த ஏ.கே. விஸ்வநாதனுக்கும், டிஜிபிக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் டி.ஜி.பி. கலந்துகொள்ளும் பல கூட்டங்களை ஏ.கே. விஸ்வநாதன் புறக்கணித்தார். விஸ்வநாதனுக்கு பதிலாக அந்த கூட்டத்தில் பங்கெடுக்கும் கூடுதல் கமிஷனர்களிடம் டி.ஜி.பி. திரிபாதி தொடர்ந்து தனது விஸ்வநாதனுக்கு எதிரான எரிச்சலை வெளிப்படுத்தி வந்தார். அதனால் டிஜிபியிடம் நல்ல பெயர் பெற்ற நேர்மையான அதிகாரியான வட இந்தியர் மகேஷ்குமார் அகர்வாலை சென்னை கமிஷனர் பதவிக்கு டிஜிபி பரிந்துரைத்தார்.

 

அதேபோல் தென்சென்னை கூடுதல் ஆணையராக சிறப்பாக செயல்பட்ட பிரேமானந்த சின்ஹாவை மதுரையில் டேவிட்சன் ஆசிர்வாதத்திற்கு பதிலாக நியமித்தார். பிரேமானந்த் சின்ஹாவின் இடத்திற்கு சென்னை நகர போக்குவரத்து துறையில் நன்றாக செயல்பட்ட அருணை, தென்சென்னை போலீஸ் கமிஷனராக டிஜிபி பரிந்துரைத்தார்.

 

சாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஏ.எஸ்.பி. ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நேரடி தொடர் புடைய பிரவின் குமார் அபினவ் என்கிற நெல்லை சரக டிஐஜி மாற்றப்படவில்லை. பிரவின் குமார் அபினவ், ஒருவிதமான முரட்டு சுபாவம் கொண்டவர். அவர் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் எடுத்தேன், கவிழ்த்தேன் என சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாளுவார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையை சார்ந்தவர்கள் எதற்கெடுத்தாலும் அடி, உதை என இறங்குவதை ஆதரிப்பார். தூத்துக்குடியில் ஜெப கூட்டம் நடத்தியவர்கள், இதே சாத்தான்குளம் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

 

இதுபற்றி புகார்கள் எழுந்தபோதும் அதை அபினவ் பொருட்படுத்தவில்லை. மாறாக இதுபோன்று புகார்கள் வரும்போது அடாவடி காவல்துறையினரை வெளிப்படையாகவே ஆதரித்தார். அவர் ஒருவித இந்து ஆதரவு செயல்பாடுகளை கொண்டிருந்தார் என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இதைப்பற்றி உயர்அதிகாரிகள் கேட்டால் அதையும் தட்டிக்கழித்துவிடுவார். அபிநவின் இந்த போக்குத்தான் சாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது. அங்கு எஸ்பியாக இருந்தவர், டிஐஜி.யின் சொல்கேட்கும் பிள்ளையாகத்தான் இருந்தார். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகும் நெல்லை சரக டிஜஜியாக இருக்கும் அபிநவ்வை மாற்றாததற்கு காரணம் டி.ஜி.பி. திரிபாதிக்கும் நெருக்கமானவர் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

 

தமிழகம் முழுவதும் 37 காவல்துறை அதிகாரிகளை மாற்றிய முதல்வர், சாத்தான் குளத்தில் நடந்த படுகொலைகள் பற்றி தவறான ரிப்போர்ட் கொடுத்த நெல்லை சரக டி.ஐ.ஜி. அபினவையும், அபினவ் கொடுத்த ரிப்போர்ட்டை முதல்வரிடம் கொடுத்த டி.ஜி.பி. திரிபாதியையும் மாற்றியிருந்தால் காவல்துறை நன்றாக செயல்பட உதவியாக இருந்திருக்கும் என்கிறார்கள் நேர்மையான காவல் அதிகாரிகள்.

 

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.