Skip to main content

ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்?

Published on 28/11/2017 | Edited on 28/11/2017
ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்? தொடரும் சர்ச்சைகள்! 

ஜெயலலிதாவின் மகள் என்றும் மகன் என்றும் அடுத்தடுத்து புற்றீசல்போல கிளம்பி வருகிறார்கள். இவர்கள் நிஜமாகவே யார் என்று தெரியாத நிலையில், அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு கிடைக்கிற முக்கியத்துவம் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் சேர்ந்து வாழ்ந்தார் என்ற தகவல் மட்டுமே அவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ரகசியம் ஆகும். குமுதம் வார இதழில் அவர் எழுதிய வாழ்க்கைத் தொடரில் இதை பகிரங்கமாக எழுதியிருக்கிறார்.

அந்த தொடரில் சோபன்பாபுவைப் பற்றி எழுதி முடித்த ஜெயலலிதா, அடுத்ததாக எம்ஜியாருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்வேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

ஆனால், முதல்வராக எம்ஜியார் பொறுப்பு வகித்த அந்த சமயத்தில், ஜெயலலிதா எழுதிய தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஜெயலலிதாவை அதிமுகவின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார் எம்ஜியார்.

கடைசிவரை எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான அந்த உறவு தெரியாமல் போனாலும், இருவரையும் அறிந்தவர்களுக்கு அது ஒன்றும் பரம ரகசியமாக இருக்கவில்லை.

இந்த அடிப்படையில்தான் ஜெயலலிதா மற்றும் எம்ஜியாரின் ரகசிய வாழ்க்கையை மையமாக வைத்தே பல்வேறு கதைகள் சொல்லப்பட்டன.

சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு குழந்தை இருந்தது. அது அமெரிக்காவில் படிக்கிறது என்று ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் தோற்றத்தோடு ஒத்துப்போகிற ஒரு பெண்ணின் படமும் அவ்வப்போது வெளியிடப்பட்டது. இதைப்பற்றி ஜெயலலிதா எதுவுமே சொன்னதில்லை.



2012 ஆம் ஆண்டு எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த மகள் என்று ப்ரியா மகாலெட்சுமி என்ற பெண் மீடியாக்களைச் சந்தித்தபோது பரபரப்பாகியது. அவர் கைது செய்யப்பட்டார். அந்த கைது நடவடிக்கைக்கு சசிகலாதான் காரணம் என்று ப்ரியா குற்றம்சாட்டினார்.

ஸ்ரீரங்கத்தில் 1986 ஆம் ஆண்டு பிறந்ததாகவும், தன்னை வளர்க்க விஜயா என்ற பெண்ணிடம் ஒப்படைத்ததாகவும் கூறிய ப்ரியாவை கைது செய்து மீடியாக்களை சந்திக்கவிடாமல் செய்தனர். இந்தச் செய்தியை வெளியிட்ட தமிழ் வாரமிருமுறை பத்திரிகை மீது அவதூறு வழக்கும் போடப்பட்டது.



அந்தச் சர்ச்சைகள் அப்படியே இருக்க, ஜெயலலிதா இறந்தவுடன் ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகன் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அந்தவழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலியாக ஆவணங்கள் தயாரித்த குற்றத்துக்காக அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில்தான், ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சு என்கிற அம்ருதா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்திலேயே 2014 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சைலஜா என்ற பெண் ஜெயலலிதாவின் சகோதரி என்று பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த சைலஜாவின் மகள்தான் மஞ்சு என்கிற அம்ருதா எனக் கூறப்படுகிறது. 1980 ஆம் ஆண்டு சென்னை மைலாப்பூரில் ஜெயலலிதாவுக்கு மகளாக பிறந்ததாகவும், ஜெயலலிதாவின் சகோதரி சைலஜா மற்றும் அவருடைய கணவர் சாரதிக்கு தன்னை தத்து கொடுத்ததாகவும் அம்ருதா கூறியுள்ளார்.



இதற்கு ஆதாரமாக அவர் சில ஆவணங்களை வைத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் கூறினார். ஆனால், அவருடைய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு செல்லாமல் நேரடியாக வந்ததை மட்டுமே தவறு என்று கூறியிருக்கிறது. எனவே, அம்ருதா தனது மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

ஜெயலலிதாவின் மகள் என்றும் மகன் என்றும் இதுவரை கூறியவர்களிடம் இல்லாத ஏதோ முக்கியமான ஆதாரம் அம்ருதாவிடம் இருப்பதாகவே படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது பார்க்கலாம்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்